வீழ்ச்சிப் பாதையில் பனைத் தொழில்.. காணாமல் போகும்"கருப்பட்டி".. தவிப்பில் பனைத் தொழிலாளர்கள்!
தூத்துக்குடி: தமிழக அரசு பனை தொழிலை உயர்த்த வழிவகுத்து கருப்பட்டி தொழிலை மேன்மை அடைய செய்ய வேண்டும் என தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தூத்துக்குடி அருகே உடன்குடியில் தயாராகும் கருப்பட்டிக்கு உள்நாடு மட்டுமின்றி வெளிநாடுகளிலும் தனி மவுசு உள்ளது. பர்மா, சிங்கப்பூர் சென்டர்களில் உடன்குடி கருப்பபட்டி கிடைக்கும் என்ற அறிவிப்பு செய்த காலமும் இதற்கு உண்டு. மருத்துவ குணம் நிறைந்த பதநீரை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட கருப்பட்டியை வாங்கி செல்ல வியாபாரிகள் முட்டி மோதுவார்கள்.
விடிலி எனப்படும் பனை ஓலை குடிசை போட்டு அடுப்பு வைத்து பதநீரை காய்ச்சுவர். பதம் வந்ததும் தேங்காய் சிரைட்டைகளில் நிரப்பி காய வைத்தால் கருப்பட்டி ரெடி. 20 வருடங்களுக்கு முன்னாள் நகர்ப் புறங்களில் மட்டுமல்லாது அனைத்து பகுதிகளிலும் கருப்பட்டியை அதிகம் பயன்படுத்துவர். ஆனால் தற்போது சீனியின் பயன்பாடு அதிகரித்து விட்டதால் கருப்பட்டியின் மீது மக்கள் மோகம் குறைந்து போய் விட்டது.
கருப்பட்டியின் சுவையின் மணமும், மருத்துவ குணமும் சீனியில் இல்லை. கருப்பிணிகளுக்கான கசாயம், பித்தத்தை விரட்டி அடிக்கும் மருத்துவத்ததில் கருப்பட்டி அதிக இடம் பிடிக்கிறது. கருப்பட்டி காப்பி குடித்தால் களைப்பு நீங்கும். உஷ்ணம் குறையும், சுண்ணாம்பு சத்து நிறைந்த கருப்பட்டிக்கு சித்த மருத்துவதத்திலும் சிறப்பு இடம் உண்டு. இப்படிப்பட்ட கருப்பட்டியை சிலர் சர்க்கரை பாகு சேர்ந்து போலியாக தயாரித்து வருவதாக புகார் எழுந்துள்ளது.
நோய்களை விரட்டி அடிக்கும் பனங்கற்கண்டையும் சிலர் போலியாக தயாரித்து அதிர்ச்சி அளிக்கி்ன்றனர். டாஸ்மாக் மூலம் மதுவிற்பனை அதிகரிக்க சொல்லும் அரசாங்கம் பனை தொழிலை உயர்த்த வழிவகுத்து கருப்பட்டி தொழிலை மேன்மை அடைய செய்ய வேண்டும் என தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். பனை நல வாரியம் அமைத்ததில் உபயோகம் இல்லை என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.