பக்ரைன், மஸ்கட்டில் இருந்து போலி பாஸ்போர்ட்டில் தப்பிவந்த இருவர் சென்னை விமான நிலையத்தில் கைது
சென்னை: பக்ரைனில் விபத்து ஏற்படுத்தியதால் சிறையில் இருந்த கேரள வாலிபர், போலி பாஸ்போர்ட்டில் சென்னை வந்தபோது விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.
சென்னை மீனம்பாக்கம் அண்ணா பன்னாட்டு விமான நிலையத்திற்கு பக்ரைனில் இருந்துவந்த விமானத்தில் வந்த பயணிகளின் ஆவணங்களை குடியுரிமை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஷாஜி(30) என்பவரின் பாஸ்போர்ட்டை சோதித்ததில் வேறு ஒருவர் பாஸ்போர்ட்டில் தனது போட்டோவை ஒட்டி எடுத்து வந்திருந்தது தெரியவந்தது.
இதுபற்றி அதிகாரிகளிடம் அவர் கூறியதாவது: சில ஆண்டுகளுக்கு முன்பு பக்ரைனுக்கு சென்று கார் டிரைவராக வேலை செய்து வந்தேன். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அங்கு விபத்து ஒன்றில் சிக்கினேன். பக்ரைன் போலீசார் என்னை கைது செய்து சிறையில் அடைத்தனர். 6 மாத சிறை தண்டனைக்கு பின்னர் வெளியே வந்து, ஏஜெண்டுகளின் உதவியுடன் வேறு நபரின் பாஸ்போர்ட்டில் சென்னை வந்தேன் என்றார்.
இதேபோல் விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த ஆறுமுகம்(40) வேறு நபரின் பாஸ்போர்ட்டில் தனது புகைப்படத்தை மாற்றி ஒட்டி மஸ்கட்டில் இருந்து விமானத்தில் சென்னை வந்த போது பிடிபட்டார். மஸ்கட்டில் கிரேன் ஆபரேட்டராக வேலை பார்த்த இவருக்கு உரிய சம்பளத்தை அங்குள்ளவர்கள் அளிக்காததால் தப்பியோடிவந்தபோது பிடிபட்டுள்ளார்.
இதையடுத்து போலி பாஸ்போர்ட்டில் வந்த ஷாஜி, ஆறுமுகம் இருவரையும் விமான நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர். விமான நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் மகிமைவீரன் வழக்குப்பதிவு செய்து கேரள வாலிபர் ஷாஜி, ஆறுமுகம் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.