போலி பாஸ்போர்ட்: பஹ்ரைனில் இருந்து சென்னைக்கு திருப்பி அனுப்பப்பட்டவருக்கு தீவிரவாதிகளுடன் தொடர்பா?
சென்னை: போலி பாஸ்போர்ட்டில் பயணம் செய்ததாகக் கூறி பஹ்ரைனில் இருந்து சென்னைக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்ட ஆப்கானிஸ்தான் வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பஹ்ரைனில் இருந்து விமானம் ஒன்று சென்னை விமான நிலையத்திற்கு வந்தது. அந்த விமானத்தில் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த சதுருதீன் மாலிக் என்பவர் வந்தார். திருட்டு பாஸ்போர்ட்டில் சென்றதால் பஹ்ரைனில் இருந்து அவர் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டார். இதையடுத்து குடியுரிமை அதிகாரிகள் மாலிக்கிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் தெரியவந்துள்ளதாவது:
கடந்த 6ம் தேதி மாலிக் டெல்லிக்கு வந்துள்ளார். அங்கிருந்து அவர் விமானம் மூலம் சென்னை வந்துள்ளார். சென்னையில் சில நாட்கள் தங்கிய அவர் கடந்த 27ம் தேதி பஹ்ரைன் சென்றுள்ளார். பஹ்ரைன் விமான நிலையத்தில் அவரை சோதனை செய்த குடியுரிமை அதிகாரிகள் அவரின் பாஸ்போர்ட் போலி என்பதை கண்டுபிடித்து அவரை திருப்பி அனுப்பி வைத்துவிட்டனர்.
சென்னை விமான நிலைய போலீசார் மாலிக்கை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அவருக்கும், தீவிரவாதிகளுக்கும் தொடர்பு உள்ளதா என்று விசாரணை நடைபெற்று வருகிறது.