போலி கேரள போலீஸ் எஸ்.ஐ – கையில் காப்பு மாட்டி கோவை ரயில்வே போலீஸ்
கோயம்புத்தூர்: கேரள போலீஸ் எஸ்.ஐ. எனக்கூறி கோவையில் ரயில்வே போலீஸை ஏமாற்றியவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடலூர் மாவட்டம், திட்டக்குடி பகுதியைச் சேர்ந்தவர் சண்முகம். இவர் கடந்த சில தினங்களுக்கு முன் கேரள மாநிலம், கோழிக்கோட்டில் உள்ள ஒரு நிறுவனத்திற்கு குழிதோண்டும் வேலைக்குச் சென்றார்.
பணி முடிந்து ஊருக்குச் செல்வதற்காக மங்களூரிலிருந்து கோவை வழியாக கட்சிகுடா செல்லும் சிறப்பு விரைவு ரயிலில் பொதுப்பெட்டியில் சனிக்கிழமை வந்துள்ளார்.
கோவை நோக்கி ரயில் வந்து கொண்டிருக்கையில் சண்முகத்திடம் வந்த ஒருவர், தன்னை சொர்ணூர் போலீஸ் எஸ்.ஐ என அறிமுகம் செய்துகொண்டு, உன்னிடம் ஒரு திருட்டு வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
சண்முகம் தன்னைப்பற்றி கூறியதை கண்டுகொள்ளாமல் அவர் வைத்திருந்த பயணச் சீட்டு, செல்ஃபோன் மற்றும் பணத்தையும் பறித்துள்ளார்.
இதற்குள் சண்முகம் பயணம் செய்த ரயில் கோவை ரயில்நிலையத்துக்கு வந்தது. அங்கு சண்முகத்தை அவர் பிடித்து இழுத்துச் சென்றுள்ளார். இதுகுறித்து தகவலறிந்த கோவை ரயில்வே போலீஸார் அந்த நபரிடம் விசாரணை நடத்திய போது தான் கேரள எஸ்.ஐ என்றும், திருட்டுச் சம்பவம் தொடர்பாக விசாரிக்க இருப்பதால் சண்முகத்தை பிடித்துச் செல்வதாகவும் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தாங்கள் விசாரித்து விட்டு பிறகு கேரளா போலீசாரிடம் ஒப்படைப்பதாக கூறிய கோவை ரயில்வே போலீஸார், சண்முகத்தை அவரது பிடியிலிருந்து மீட்டு காவல் நிலையத்துக்கு அழைத்து வந்தனர்.
அப்போதுதான், சண்முகத்தை மிரட்டி பணம், செல்ஃபோன், ரயில் டிக்கெட் உள்ளிட்டவற்றைப் பறித்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து நீண்ட நேரத் தேடலுக்குப் பிறகு எஸ்.ஐ எனக்கூறிய அந்த நபரை பிடித்த ஆய்வாளர் லாரன்ஸ் தலைமையிலான போலீஸார் அவரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்துள்ளனர்.
விசாரணையில், அவர் கேரள மாநிலம், கண்ணனூரைச் சேர்ந்த ஆர்.பிரசாத் என்பதும், மாங்காட்டுபுதூரில் 4 ஆவது பட்டாலியனில் காவலராக இருந்தவர் எனவும், 2003 இல் ஒழுங்கீனம் காரணமாக அவர் பணிநீக்கம் செய்யப்பட்டதும், அதற்குப் பிறகு வேலையில்லாமல் சுற்றியவர், போலீஸ் எஸ்.ஐ என்று கூறி ரயில் பயணிகளிடம் மோசடியில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
அவர் மீது மிரட்டி பணம் பறித்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து போலீசார் அவரைக் கைது செய்துள்ளனர்.