ராஜ்யசபா எம்.பி போல போலி ஐடி கார்டு- சுகேஷின் தில்லாலங்கடி அம்பலம்
சுகேஷிடமிருந்து ராஜ்யசபா எம்.பி பயன்படுத்தும் ஐடி கார்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை: இரட்டை இலை சின்னம் பெற தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் தர முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சுகேஷ், ராஜ்யசபா எம்.பி போல போலி ஐடி கார்டு வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே லஞ்சம் தர முயன்ற வழக்கில் கைதாகியுள்ள சுகேஷ் மீது ஆள்மாறாட்ட வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக தேர்தல் ஆணையத்திற்க ரூ.50 கோடி லஞ்சம் கொடுக்க முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில் சுகேஷ் சந்திரசேகர், அதிமுக அம்மா அணி துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், அவரது நண்பர் மல்லிகார்ஜூனா, இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர், ஹவாலா ஏஜெண்டு நரேஷ் ஆகியோரை டெல்லி குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.
இதில் கைது செய்யப்பட்டு அனைவரும் திகார் சிறையில் அடைக்கப்பட்டனர். 35 நாட்கள் சிறைவாசத்திற்கு பின்னர் டிடிவி தினகரன், மல்லிகார்ஜூனா ஆகியோருக்கு ஜாமின் அளிக்கப்பட்டது.
இதனிடையே சுகேஷிடம் இருந்து டெல்லி கிரைம் பிராஞ்ச் போலீசார் போலியான அடையாள அட்டை ஒன்றை கைப்பற்றியுள்ளனர். ராஜ்யசபா எம்பிக்கள் பயன்படுத்தும் அந்த அடையாள அட்டையை சுகேஷ் வைத்திருந்தார்.
அந்த அடையாள அட்டை அச்சு அசலாக ராஜ்யசபா எம்.பிக்கள் பயன்படுத்துவது போலவே இருந்தது. இதனையடுத்து சுகேஷ் மீது இந்திய தண்டனைச் சட்டம் 467 பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற வளாகத்திற்குள் எம்.பிக்களை சந்திப்பதற்காக சுகேஷ் இந்த கார்டை பயன்படுத்தியிருக்கலாம் என்று கூறியுள்ள போலீசார், போலி அடையாள அட்டையைப் பயன்படுத்தி பாதுகாவலர்களை சுகேஷ் ஏமாற்றியிருந்ததாக கூறியுள்ளனர்.