மின்னுவதெல்லாம் பொன் அல்ல.. காண்பதெல்லாம் மண் அல்ல.. !
திருநெல்வேலியில் இருந்து நூதன முறையில் கலப்பட மணல் கடத்தி வந்த இரண்டு லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டது.
ஆவடி: திருநெல்வேலியில் இருந்து நூதன முறையில் சிலிக்கானுடன் கலப்படம் செய்யப்பட்ட மணலை ஏற்றி வந்த இரு லாரிகளை ஆவடி போலீஸார் பறிமுதல் செய்தனர்.
மின்னுவதெல்லாம் பொன்னல்ல என்பது பழமொழி. ஆனால் காண்பதெல்லாம் மண் அல்ல என்பது புதுமொழி... இது எதற்குனு பார்க்கறீங்களா?
ஆம்... காய்கறிகள், கனிகள், உணவு பொருள்கள் என அனைத்திலும் கலப்படம் செய்யப்பட்டு நமது உடல்நலமே கெட்டு போய் உள்ள நிலையில் தற்போது வீடுகள், கட்டடங்கள், அலுவலகங்கள் இவையெல்லாம் மட்டும் ஏன் பல ஆண்டுகளுக்கு நீடிக்க வேண்டும் என்ற நினைப்பிலோ என்னவோ தற்போது மணலிலும் கலப்படம் செய்து வியாபாரம் செய்து வருகின்றனர்.
இந்த விவகாரம் ஆவடியில் நடந்துள்ளது தெரியவந்துள்ளது. ஆவடி அடுத்து நெமிலிச்சேரி பகுதியில் வாகன தணிக்கையின் போது திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்த சென்னைக்கு மணல் கடத்தி வந்த இரண்டு லாரிகளை வருவாய் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
அதிகாரிகளை கண்ட லாரி ஓட்டுனர்கள் தப்பியோடினர். பறிமுதல் செய்யப்பட்ட இரண்டு லாரிகளும் பட்டாபிராம் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டன. மணலை சோதனை செய்ததில் பாதிக்கு பாதி சிலிக்கான் கலப்படம் செய்யப்பட்ட மணல் என்று தெரியவந்தது.
மீதமுள்ளவை ஜலிக்கப்பட்ட மணல் கற்களாக இருந்தன. அந்த மணல் குவியலில் மொத்தத்தில் 20-30 சதவீதம் மணல் மட்டுமே கொண்ட கலப்பட கலவையை செந்நிற எம் சாண்ட் என்ற போலி ரசீதுகள் கொண்டு கடத்திவரப்பட்டது தெரியவந்துள்ளது.
இந்த மாதிரி மணலை விற்றால் எப்படி பாஸ் நம்பி வீட்டைக் கட்ட முடியும்.. மக்களே உஷாரா இருந்துக்கங்க.