டிப்ளமோ படித்துவிட்டு சட்டவிரோதமாக கருக்கலைப்பு மையம் நடத்தியவர் கைது
திருப்பத்தூர்: திருப்பத்தூரில் சட்ட விரோதமாக கருகலைப்பு மையம் நடத்தி வந்தவர் கைது செய்யப்பட்டார். மேலும் அவரது ஸ்கேன் மையத்துக்கு மத்திய மருத்துவக்குழுவினர் சீல் வைத்தனர். அவர் பயன்படுத்திய ஸ்கேன் கருவியும் பறிமுதல் செய்யப்பட்டன.
வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் சாம நகரைச் சேர்ந்தவர் சுகுமார் (52). டிப்ளமோ மட்டுமே படித்த இவர் மீனாட்சி நிலையம் எதிரே உள்ள நகராட்சிக்கு சொந்தமான கட்டடத்தில்அல்ட்ரா சவுண்ட் என்ற பெயரில் ஸ்கேன் மையம் நடத்தி வந்துள்ளார்.
இந்நிலையில் இந்த ஸ்கேன் மையத்தில், கருவில் இருக்கும் சிசு ஆணா, பெண்ணா என்பதை கண்டறிந்து கணவரிடம் கூறியதால் தகராறு ஏற்பட்டதாக தருமபுரியைச் சேர்ந்த பெண் ஒருவர், மத்திய மருத்துவக் குழுவிடம் புகார் அளித்துள்ளார். இதையடுத்து அதிகாரிகள், அங்கு ஆய்வு நடத்திய போது, சுகுமார் என்பவர் போதிய கல்வித்தகுதி இல்லாமல் டிப்ளமோ மட்டுமே படித்துவிட்டு ஸ்கேன் மையம் நடத்தி வந்தது தெரிய வந்தது.
இதையடுத்து சுகுமாரை போலீசார் கைது செய்தனர். ஸ்கேன் மையத்துக்கு சீல் வைத்த அதிகாரிகள், ரூ.9 லட்சம் மதிப்பிலான உபகரணங்களையும் பறிமுதல் செய்தனர்.