அடக்கொடுமையே.. பணத்துடன் எஸ்கேப்பான போலி தற்காலிக கண்டக்டர்... மடக்கி பிடித்த பயணிகள்
திருவாரூரில் தற்காலிக நடத்துனர் என்ற போர்வையில் பயணிகள் பணத்தை வசூல் செய்து தப்பிக்க முயன்ற நபரை போலீசார் கைது செய்தனர்.
திருவாரூர்: போக்குவரத்து ஊழியர்களின் போராட்டம் 8ம் நாளை எட்டியுள்ள நிலையில், கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக அரசு பேருந்துகளை தற்காலிக நடத்துனர், ஓட்டுனர் இயக்கி வருகின்றனர்.
பெரும்பாலும் பேருந்துகள் இயக்கப்படாத நிலையில், சில பேருந்துகள் மட்டும் தமிழகம் முழுவதும் இயக்கப்பட்டு வருகிறது. இதனால் அலுவலகங்களுக்கு செல்வோர், வெளியூர் செல்வோர், மாணவ-மாணவிகள் என அனைத்து தரப்பு மக்களும் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
திருவாரூர் மாவட்டத்திலும்ம் ஒரு சில பேருந்துகள் மட்டும் இயக்கப்பட்டு வரும் நிலையில் பொங்கல் பண்டிகையையோட்டி பேருந்து நிலையம் முழுவதும் அதிகளவு மக்கள் கூட்டம் நிரம்பியுள்ளது.
இதனைபயன்படுத்தி கொண்ட இரு மர்மநபர்கள், கூட்ட நெரிசல் நிறைந்த பேருந்தில் தற்காலிக நடத்துனர்கள் போல ஏறி, பேருந்தில் பயணம் செய்து மக்களிடம் டிக்கெட் கட்டணம் வசூலித்துள்ளனர். இந்நிலையில் பேருந்து நாகை நோக்கி சென்றுக்கொண்டிருந்த போது செக்கிங் அதிகாரிகள் பேருந்தை நிறுத்தியுள்ளனர்.
செக்கிங் அதிகாரிகளை பார்த்தவுடன் அந்த மர்மநபர்கள் 2பேரும் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். இதனைக்கண்டு சக பயணிகளும், செக்கிங்குடன் இருந்த போலீசாரும் இணைந்த தப்பியோடியதில் ஒருவர் பிடித்தனர். தப்பியோடிய மற்றொரு நபரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். தன்னுடன் வந்தது போலி நடத்துனர் என்பதையே தெரியாமல் ஓட்டுனரும் பேருந்தை இயக்கி வந்ததும் குறிப்பிடத்தக்கது.