சென்னை விமான நிலைய படிக்கட்டின் மேற்கூரை உடைந்தது... இறங்க முடியாமல் தவித்த பயணிகள்
சென்னை: சென்னை விமான நிலையத்தின் 17வது கேட் படிக்கட்டின் மேற்கூரை தீடீரென உடைந்து விழுந்ததால் மொரீசியல் விமானப் பயணிகள் இறங்க இயலாமல் பெரும் அவதிக்கு ஆளானார்கள்.
புதிதாக விரிவாக்கம் செய்யப்பட்ட சென்னை விமான நிலையத்தில் மேற்கூரை இடிந்து விழும் சம்பவம் அடிக்கடி நடந்து வருகிறது. இதுவரை கிட்டத்தட்ட 25க்கும் அதிகமான முறை இவ்வாறு மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது.
இந்நிலையில், இன்று அதிகாலை விமான நிலையத்தின் 17வது கேட்டில் ‘ஏரோ பிரிட்ஜ்' என்று சொல்லக் கூடிய விமானத்தில் இருந்து பயணிகளை கீழே இறங்கக்கூடிய நடமாடும் படிக்கட்டில் உள்ள மேற்கூரை உடைந்து விழுந்தது.
இதனால், 17வது கேட்டில் பயணிகள் இறங்கும் வகையில் நிறுத்தப்பட்ட மொரிசியஸ் நாட்டு விமானத்தில் இருந்த பயணிகள் சென்னை விமான நிலையத்திற்குள் வருவதில் சிரமம் ஏற்பட்டது.
நீண்ட நேரத்திற்குப் பின், விமான நிலைய ஊழியர்கள் மாற்று ஏணிப் படியை கொண்டு வந்து விமானத்திலிருந்த பயணிகளை கீழே இறக்கினர்.
இச்சம்பவம் தொடர்பாக விமான நிலைய உயர் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.