நாமக்கல்லில் 1 ஆம் வகுப்பு மாணவன் கடத்தல்.. சித்தப்பா கைது; பாட்டி, தாத்தாவிற்கு வலைவீச்சு!
நாமக்கல்: நாமக்கல்லில் பள்ளி வேனை வழிமறித்து 1 ஆம் வகுப்பு மாணவன் ஒருவனை கடத்திய வழக்கில் அவனது சித்தப்பா போலீசாரால் கைது செய்யப்பட்டார். மேலும், கடத்தலுக்கு காரணமான தாத்தா, பாட்டியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள சமுத்திரம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் தீபிகா. இவரது மகன் லோகித் தனியார் பள்ளியில் 1 ஆம் வகுப்பு படித்து வந்தான். இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு வழக்கம்போல் பள்ளி வேனில் சென்றுள்ளான் லோகித்.
இந்த வேன் போக்கம்பளையம் என்ற இடத்தில் சென்றபோது பள்ளி வேனை வழிமறித்து லோகித்தை சிலர் காரில் ஏற்றிச் சென்றனர். இதுகுறித்து பள்ளியின் வேன் டிரைவர் திருச்செங்கோடு ரூரல் போலீசில் மாணவன் கடத்தப்பட்டதாக புகார் செய்தார். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில் லோகித்தை அவரது தாத்தா கன்னியப்பன், பாட்டி நிர்மலா மற்றும் சித்தப்பா மகேந்திரன் ஆகியோர் கடத்திச் சென்றது தெரியவந்தது.
இதையடுத்து மகேந்திரனை கைது செய்த போலீசார், கன்னியப்பன், நிர்மலா மற்றும் மாணவன் லோகித் ஆகியோரை வலைவீசி தேடி வருகின்றனர். இதற்கிடையில் போலீசார் நடத்திய விசாரணையில் தீபிகாவின் கணவரும் லோகித்தின் தந்தையுமான ஜெய்கார்த்திக் கடந்த 11 மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இதையடுத்து தீபிகா கடந்த 3 மாதங்களுக்கு முன்பு 2 ஆவது திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
அப்போது லோகித்தை தாங்கள் வளர்த்துக்கொள்கிறோம் என்று கன்னியப்பன், நிர்மலா, மகேந்திரன் ஆகியோர் தெரிவித்து உள்ளனர். ஆனால் தீபிகா தனது மகனை தானே வளர்த்துக்கொள்கிறேன் என்று தெரிவித்து உள்ளார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு உள்ளது. இந்த நிலையில்தான் மாணவன் லோகித் கடத்தப்பட்டது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.