வாலிபரின் காதுக்குள் குடியேறி குடும்பம் நடத்திய கரப்பான் பூச்சி!
பீஜிங்: சீனாவில் வாலிபர் ஒருவரின் காதுக்குள் குடியேறி குடும்பம் நடத்திய கரப்பான் பூச்சியையும் 25 குஞ்சுகளையும் வெளியேற்றியுள்ளனர் டாக்டர்கள். அதிர்ச்சிகரமான இந்த சம்பவம் ஊடகங்களில் பரபரப்பு செய்தியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் கரப்பான் பூச்சியை கதாநாயகிகளை பயமுறுத்துவதற்கான டெக்னிக் ஆக இயக்குநர்கள் பயன்படுத்துவார்கள். வீட்டில் இருக்கும் கரப்பான் பூச்சியை எப்படி கொல்ல வேண்டும் என்று விதம் விதமாக பாடம் எடுக்கின்றனர் விளம்பரங்களின் மூலம். கரப்பானை கொல்ல அடிக்கும் மருந்துகள் மனிதர்களுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது.
நம்முடைய இந்தக் கட்டுரை அதைப்பற்றியதல்ல. சீனாவில் 19 வயது இளைஞர் ஒருவர் தனது காதினை கரப்பான் பூச்சிக்கு வாடகைக்கு விட்ட கதையைப் பற்றியது.
வலியால் துடித்த வாலிபர்
தென் கிழக்கு சீனாவைச் சேர்ந்த லீ என்ற வாலிபருக்கு சமீபத்தில் காதில் பயங்கர வலி ஏற்பட்டுள்ளது. காது மூக்கு தொண்டை நிபுணரைப் பார்த்து சிகிச்சைக்காக அட்மிட் ஆனார். வாலிபரின் காதினை பரிசோதனை செய்த டாக்டருக்கோ பயங்கர ஷாக்.
குடும்பம் நடத்திய கரப்பான்பூச்சி
லீயின் காதுக்குள் ஒரு பெரிய கரப்பான் பூச்சியும் அவற்றின் 25 குட்டிகளும் அழகாக குடும்பம் நடத்திக்கொண்டிருந்தன. இதைப் பார்த்த மருத்துவருக்கு மயக்கம் வராத குறைதான்.
மருத்துவரின் சாதனை
கரப்பான் பூச்சியின் குடும்பத்தால் வாலிபரின் காது துவாரம் முற்றிலும் அடைபட்டுப் போயிருந்தது. செவிக்கு பாதிப்பு இல்லாமல் நவீன சிகிச்சையின் மூலம் கரப்பான் பூச்சியையும் அவற்றின் குட்டிகளையும் சாமர்த்தியமாக வெளியே எடுத்தார் மருத்துவர் யங் ஜிங்.
காது அவுட் ஆயிருக்கும்
லீக்கு தெரியாமலேயே அவரது காதுக்குள் புகுந்த கரப்பான் பூச்சி, முட்டையிட்டு காதுக்குள்ளேயே குடியும் குடித்தனமுமாக இருந்துள்ளது. காது முழுவதையும் குத்தகைக்கு எடுத்துக்கொண்ட கரப்பான்பூச்சி குடும்பம், லீயின் செவித்திறனை பதம் பார்த்திருக்கும். நல்லவேளையாக அப்படி எதுவும் நடக்கவில்லை என்கிறார் டாக்டர் யங் ஜிங்.