குடித்துவிட்டால் இப்படியா மூளை மழுங்கி போயிடும்? .. ஒரு தந்தை செய்த காரியத்தைப் பாருங்க!
குழந்தையை தரையில் தூக்கி அடித்த தந்தையை போலீசார் தேடி வருகின்றனர்.
Recommended Video
திருவாரூர்: குடித்துவிட்டால் ஒருவருக்கு மூளை இப்படியா மழுங்கி போயிடும்? குடியோடு சேர்ந்து ஈவு இரக்கமும் அடியோடு மக்கி போயிடுமா என்ன? குடிகார தகப்பன் செய்த காரியத்தை படிங்க.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி வேங்கைபுரம் பகுதியை சேர்ந்தவர் வேல்முருகன். வயது 28. கூலி தொழிலாளியான இவருக்கு அமுதா என்ற மனைவியும், அவந்திகா என்ற 2 வயது பெண் குழந்தையும் இருக்கிறார்கள். வேலையை முடித்துவிட்டு வேல்முருகன் தினமும் குடித்துவிட்டு வருவாராம். வந்தாலும் சும்மா இருப்பதில்லை. மனைவியுடன் தினமும் சண்டையும், தகராறும்தானாம்.
இதேபோலதான் சம்பவத்தன்றும் வேல்முருகன் தள்ளாடிய நிலையில் வீட்டுக்கு வந்துள்ளார். வழக்கம்போல் பஞ்சாயத்தும் ஆரம்பமாகிவிட்டது.
வாய்வார்த்தை வாக்குவாதமாக மாறி, வாக்குவாதம் தகராறாக மாறி, தகராறு அடிதடி வரை போயிற்று. யாரை அடித்தார் தெரியுமா? இரண்டரை வயது குழந்தையை. எப்படி அடித்தார் தெரியுமா? குழந்தையை தலைகீழாக தூக்கி தரையில் ஓங்கி அடித்து. இந்த சம்பவம் எப்போது நடந்தது தெரியுமா? தந்தையர் தினத்தன்று.
விளையாடி கொண்டிருந்த குழந்தையை தூக்கி அடித்ததில் வீல் என்று குழந்தை அவந்திகா அலற, தாய் அமுதா கதற, குழந்தையின் மண்டை உடைந்து ரத்தம் பொலவென கொட்ட கொட்ட.. பக்கத்து வீட்டுக்காரர்கள் ஓடிவந்து குழந்தையை துக்கி கொண்டு மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு தூக்கி கொண்டு ஓடினர். முதலுதவிக்கு பின்னர் தஞ்சை அரசு மருத்துவமனையில் தற்போது தீவிர சிகிச்சையில் அவந்திகா உள்ளாள்.
குழந்தையை தூக்கி அடித்து ரத்தம் கொட்ட துவங்கிய உடனேயே அந்த பாவி தகப்பன், தப்பி ஓடிவிட்டான். இது தொடர்பாக மன்னார்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பியோடிய வேல்முருகனை தேடி வருகின்றனர்.
ஐந்தறிவு உள்ள ஜீவன்களுக்கு கூட இப்படி செய்ய துணிவு வராமல், தன் இனத்தை அன்போடு காக்கும். ஆனால் குடிகார வேல்முருகனுக்கு எப்படித்தான் இதை செய்ய மனம் வந்ததோ? இந்த குடிபோதையால் இன்னும் எத்தனை குடும்பங்கள் நாட்டில் குட்டிச்சுவராக போகிறதோ?