குடியை கெடுத்த குடி .. உலக்கையால் மனைவியை அடித்துக் கொன்ற கணவர்
மனைவியை உலக்கையால் அடித்த கணவன் போலீசில் சரண் அடைந்தார்.
Recommended Video
தூத்துக்குடி: குடிகாரர்களின் அட்டகாசமும், வன்முறைகளும் பெருகி கொண்டே வருகிறது. குடி குடியை கெடுக்கும் என்பது நாளுக்கு நாள் நூற்றுக்கு நூறு நிரூபணமாகி கொண்டே வருகிறது. குடியால் சீரழிந்த ஒரு குடும்பத்தின் சம்பவம் இது.
தூத்துக்குடி தாய் நகர் சிலோன் காலனியை சேர்ந்தவர் மோட்ச ராணி. இவரது கணவர் சண்முகசுந்தரம். இவருக்கு முக்கியமான வேலையே காலையில் எழுந்ததும் மது குடிப்பதுதான். எங்கேயும் வேலை வெட்டிக்கு போவது கிடையாது. மனைவிதான் வேலைக்கு செல்வார். கடற்கரையில் மீன் வெட்டிக் கொடுக்கும் வேலைதான் மனைவிக்கு குடும்பம் நடத்த உதவுகிறது. இந்த பணத்தை குடிப்பதற்கு மனைவியிடம் கேட்பார் சண்முகசுந்தரம்.
குடிப்பதற்கு மனைவி பணம் தந்தே ஆக வேண்டும். இல்லையென்றால் எப்போதுமே சண்டைதான், தகராறுதான். இந்த லட்சணத்தில் குடிகார சண்முகசுந்தரத்திற்கு 51 வயதாகும் தனது மனைவியின் நடத்தை மீது சந்தேகம் வேறு. ஒன்று குடிப்பதற்கு பணம் தந்துவிட வேண்டும், இல்லையென்றால் நடத்தையில் சந்தேகப்பட்டு வாய்க்கு வந்தபடியெல்லாம் பேசி அமர்க்களம் செய்வது. இதுதான் எந்நேரமும் நடந்துள்ளது.
இந்நிலையில் நேற்றிரவும் சண்முகசுந்தரம் குடித்துவிட்டு மனைவியிடம் சண்டை ஆரம்பித்துள்ளார். விடிய விடிய சண்டை. இன்று அதிகாலை 4 மணியளவில் வீட்டிலிருந்த உலக்கையை கொண்டு வந்து சண்முகசுந்தரம் மனைவி தலையில் ஓங்கி அடிக்க தொடங்கினார். இதில் வெள்ளமாய் ரத்தம் ஓட, அங்கேயே பிணமானார் மோட்சராணி.
பின்னர், கொலை செய்த கணவர் நேராக தாளமுத்து நகர் காவல்நிலையத்தில் வந்து சரணடைந்துவிட்டார். தற்போது போலீசார் மோட்சராணியின் உடலை கைப்பற்றி தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.