பொது இடத்தில் சரக்கடித்தவரை தட்டிக்கேட்ட போலீஸை திரண்டு வந்து உதைத்த குடும்பம்!
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் பொது இடத்தில் சரக்கடிக்க கூடாது என்று சொன்ன போலீஸ்காரருக்கு உருட்டு கட்டையால் அடி விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் பகுதியை சேர்ந்தவர் கண்ணன். தமிழக காவல்துறையில் காவலராக பணியாற்றும் இவர் கடந்த ஆறு மாதத்துக்கு முன் கோவை மாவட்டம் காமநாயக்கன்பாளையம் காவல் நிலையத்தில் இருந்து சூலுார் காவல் நிலையத்துக்கு பணிமாற்றம் செய்யப்பட்டார்.
நேற்று முன்தினம் இரவு 12:45 மணிக்கு சிந்தாமணிப்புதுார் சத்தியநாராயணா நகர் பகுதியில் ஊர்க்காவலர் படையை சேர்ந்த குணசேகரன் என்பவருடன் கண்ணன் காவல் பணிக்காக சென்றார்.
அப்போது, அங்குள்ள மளிகை கடையின் முன்பு ஒருவர் அமர்ந்து கொண்டு மது அருந்திக்கொண்டிருந்தார். அங்கு சென்ற கண்ணன் பொது இடத்தில் உட்க்கார்ந்து மது அருந்தக்கூடாது என்று கூறி அவரை அங்கிருந்து போகும்படி கூறியுள்ளார்.
இதனால், ஏற்பட்ட வாக்குவாதத்தில் மது அருந்திக்கொண்டிருந்தவர் எழுந்து திடீரென காவலர் கண்ணனை சரமாரியாகத் தாக்கத் துவங்கினார். சத்தம் கேட்டு அங்கு வந்த அந்த நபரின் சகோதரரும், தாயும் கட்டையால் சேர்ந்து கண்ணனை தாக்கியுள்ளனர்.
இதனால் காயமடைந்த கண்ணன் சூலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தார். இது குறித்து சூலுார் போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்ண்ணனைத் தாக்கிய மளிகை கடை உரிமையாளர் பொன்சிங், அவரது சகோதரர் செல்வசிங், தாய் சாந்தி ஆகிய மூவர் மீதும் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்துள்ளனர்.