இரும்பு ராடால் மருமகன் தலையைப் பிளந்த மாமனார்.. பதிலுக்கு அரிவாளால் வெட்டிய மருமகன்!
தாம்பரம் அருகே மகளிடம் தகராறு செய்த மருமகனை மாமனார் இரும்பு ராடால் அடித்து மண்டையை பிளந்ததால் ஆத்திரமடைந்த மருமகன் அவரை அரிவாளால் வெட்டினார்.
தாம்பரம்: சென்னை தாம்பரம் அருகே மனைவியை குடும்பம் நடத்த அனுப்ப மறுத்ததால் மாமனாரை அரிவாளால் வெட்டிய மருமகனை போலீஸார் கைது செய்தனர்.
கிழக்கு தாம்பரம் மோதிலால் நகர் பகுதியைச் சேர்ந்தவர் பிரான்சிஸ் ரூபின்சன் (59). இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். இவரது மகள் புஷ்பராணி, அதே பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
சதீஷ்குமாருக்கு குடிப்பழக்கம் உள்ளதால் கணவன், மனைவிக்குள் அடிக்கடி தகராறு ஏற்படும். கடந்த வாரம் தம்பதிக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் புஷ்பராணி கோபித்துக்கொண்டு அருகில் உள்ள தாய் வீட்டுக்கு குழந்தைகளுடன் சென்றுவிட்டார்.
இதனால் மனைவியை தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு நேற்று இரவு மாமனார் வீட்டுக்கு சென்ற சதீஷ்குமார் அழைத்தார். அதற்கு பிரான்சிஸ் ரூபின்சன் மறுப்பு தெரிவித்தார். இதனால் இருவருக்கும் வாய்தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த பிரான்சிஸ் இரும்பு ராடை எடுத்து மருமகன் மண்டையில் ஓங்கி அடித்தார்.
இதனால் கோபமடைந்த சதீஷ் குமார், மாமனாரை அரிவாளால் வெட்டினார். இதில் படுகாயமடைந்த ரூபின்சன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தகவல் அறிந்த சேலையூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து சதீஷ்குமாரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.