முன்னாள் அமைச்சர் நெருக்கடி.. இரு பிள்ளைகளோடு கருணை கொலைக்கு ரோசய்யாவிடம் அனுமதி கேட்கும் பெண்
சென்னை: கோடிக்கணக்கில் சொத்து இருந்தும் அனுபவிக்க முடியாமல் உறவினர்களால் மிரட்டப்பட்டு பந்தாடப்படும் கிருஷ்ணகிரியை சேர்ந்த ஒரு குடும்பம், கருணைக் கொலை செய்துகொள்ள அனுமதி தருமாறு ஆளுநர் ரோசய்யாவை பார்க்க அனுமதி கேட்டு சென்னையில் காத்துக்கிடக்கிறது.
கிருஷ்ணகிரியை சேர்ந்தவர் பவானிசங்கர். அவரது மனைவி கல்பனா இவர்களது மகள் பரணிஸ்ரீ மற்றும் மகன் வெங்கட். பவானிசங்கருக்கு காவிரிப்பட்டிணத்தில் சுமார் ரூ.17 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் உள்ளனவாம்.
ஆனால், கல்பனா ஏழை வீட்டு பெண் என்பதால் அவரை குழந்தைகளோடு விரட்டிவிட்டு, பவானிசங்கருக்கு அவரின் அக்கா மகளை திருமணம் செய்து வைத்து சொத்துக்களை குடும்பத்தை விட்டு வெளியே போகாமல் பார்த்துக்கொள்ளலாம் என்று திட்டமிடுகின்றனர் பவானிசங்கரின் பெற்றோர் மற்றும் உடன் பிறந்தோர்.
இந்த திட்டத்திற்கு கல்பனா மட்டுமின்றி, பவானிசங்கரும் ஒப்புக்கொள்ளவில்லையாம். எனவே ரவுடிகளை வைத்தும், போலீசாரை வைத்தும், கல்பனாவையும், குழந்தைகளையும் பவானிசங்கர் குடும்பத்தார் மிரட்டிவருவதாக கூறப்படுகிறது.
பவானிசங்கர் சம்பாதித்து வாங்கிய சொத்துக்களின் பத்திரங்களையும் பிடுங்கி வைத்துக்கொண்டுள்ள குடும்பத்தார், பாக பிரிவினை வைத்தும் பூர்வீக சொத்துக்களையும் கொடுக்க மறுக்கிறார்களாம். இதற்கு முன்னாள் அமைச்சர் முனுசாமி உடந்தை என்று குற்றம்சாட்டுகிறார் கல்பனா.
கவர்னர் ரோசய்யாவை சந்தித்து, கருணை கொலைக்கு அனுமதி வாங்கிவிட்டு, உடல் உறுப்புகளை தானம் செய்துவிடலாம் என்ற எண்ணத்தில், கல்பனா தனது இரு பிள்ளைகளுடன் சென்னை வந்துள்ளார். ஆனால் ஆளுநரை பார்க்க காவல்துறை அனுமதி மறுத்துவிட்டது.
இதுகுறித்து பவானி கூறுகையில், பள்ளி கட்டணம் செலுத்த முடியாமல், பிள்ளைகள் வீட்டில் இருக்கிறார்கள். பல கோடி ரூபாய் சொத்து இருந்தும் இந்த நிலைமையில் உள்ளோம். இதற்கெல்லாம் முன்னாள் அமைச்சர் முனுசாமியும், என்னுடைய கணவரின் அண்ணன் குமாரும்தான் காரணம். முனுசாமி எங்கள் உறவினர் இல்லை. ஆனால், குமாருடன் இணைந்து எனக்கு சேர வேண்டிய சொத்து உள்ள இடத்தில் ஜுவல்லரி திறக்க முனுசாமி திட்டமிட்டுள்ளார். எனவேதான் அவரும் கூட்டு சேர்ந்து அதிகார பலத்தை காண்பிக்கிறார். முதல்வர்தான் எங்களுக்கு வாழ வழிகாட்ட வேண்டும். இவ்வாறு கல்பனா தெரிவித்தார்.