குடும்பம் எக்காரணத்தை கொண்டும் பிரியக்கூடாது.. நினைவுபடுத்தும் கருணாநிதி மகள் செல்வி
Recommended Video
சென்னை: திமுக தலைவர் மறைந்த கருணாநிதி தனது ஆன்மீக நம்பிக்கை குறித்து என்ன சொல்வார் என்பதை வெளிப்படுத்தியுள்ளார் அவர் மகள் செல்வி.
சன் நியூஸ் சேனலுக்கு அளித்த சிறப்பு பேட்டியில் செல்வி கூறியதாவது:
திருக்குவளை நாட்கள் பற்றி எங்களிடம் நிறைய கூறியுள்ளார். தமிழகத்தில் அப்பாவிற்கு பிடித்த ஊர் திருவாரூர், திருக்குவளை, அண்ணா பிறந்த காஞ்சிபுரம், பெரியாரின் ஈரோடு ஆகிய 4 ஊர்கள் மிகவும் அதிகம் பிடிக்கும்.
தமிழகத்தை தவிர வேறு ஊர் அவருக்கு பிடிக்காது. நாங்கள் வெளிநாடு செல்ல வேண்டும் என்று கேட்டால் பெர்மிஷன் தரமாட்டார். ஏம்மா இப்படி ஆடம்பர வாழ்க்கை வாழ வேண்டும் என்று நினைக்கிறீர்கள் என்று கேட்பார். தமிழ்நாடுதான் அவருக்கு பிடிக்கும். தமிழ்நாடு, தமிழக மக்கள் அதுதான் அப்பாவிற்கு ரொம்ப முக்கியம். பேரன், பேத்திகள் வந்த பிறகும் எங்கள் மீது அன்பு குறையவில்லை. ஒரே மாதிரிதான் அன்பு செலுத்துவார்.
கிண்டல்
எனது கடவுள் பக்தி குறித்து, அவர் விமர்சனம் செய்தது கிடையாது. நான் விபூதி வைத்திருக்கும்போது பார்த்தால், என்னம்மா கே.பி.சுந்தராம்பாள் மாதிரி இருக்குறியே என கூறியுள்ளார். பேரன், பேத்திகளுக்கு 'ழா' உச்சரிப்பு வராதபோது, கலைஞரே அதை சொல்லி கொடுத்து திருத்தியுள்ளார். கலைஞர் வசனங்களை எங்கள் அண்ணன்கள் பேசுவார்கள். திருவாரூர் போகும்போது, மனோகரா வசனத்தை அழகிரி அண்ணன், முத்தண்ணன் பேசுவார். எனது மகள், கண்ணகி வசனத்தை மோனோ ஆக்டிங் செய்து ஸ்கூலில் பரிசு வாங்கியுள்ளார்.
என்னையே கொடுக்கிறேன்
உடல் நலம் சரியில்லாமல் இருந்தபோது, எங்கள் பெயரை கூப்பிட சொல்லுவோம். அண்ணா என்றுதான் அவர் பதில் கூறினார். ஜூன் 3ம் தேதி, கருணாநிதியின் பிறந்த நாள். 2ம் தேதி, அவரிடம், உங்கள் பிறந்த நாளுக்கு எங்களுக்கு என்ன பரிசு கொடுக்க போகிறீர்கள் என்று கேட்டேன். என்னையே கொடுக்கிறேன் என்று கூறினார். அதுதான் அவர் கடைசியாக என்னிடம் பேசிய வார்த்தை. பிறகு அவர் தொண்டை சிகிச்சையில் இருந்தார்.
முரசொலி மாறன் போட்டோவிற்கு முத்தம்
தொண்டையில் கடைசியாக குழாய் மாற்று சிகிச்சை செய்யும் ஒரு வாரம் முன்பாக, அப்பாவை, அவரது அம்மா, அப்பா போட்டோ முன்பாக கூட்டி சென்று நிறுத்தினோம். ஏனெனில், அப்பா எப்போது வெளியே போனாலும், அவருடைய அம்மா, அப்பா போட்டோவிடம் சொல்லிவிட்டுதான் செல்வார். வெளியூர் செல்லும்போது அவர் அம்மா, அப்பா போட்டோ முன்பாக 100 ரூபாய் வைத்துவிட்டுதான் போவார். ஆனால், நாங்கள் அன்று போட்டோவை காட்டியபோது, அவர் எந்த ரியாக்ஷனும் காட்டவில்லை. ஆனால், முரசொலி மாறன் படத்தை காட்டியபோது, அதை கையால் தொட்டு உதட்டில் முத்தம் கொடுத்தார். எங்களால் தாங்க முடியவில்லை அந்த தருணத்தை. எதுக்காக அவுங்க மனசாட்சிக்கு செய்தார்களா என்ன என்று புரியவில்லை.
பிரியக்கூடாது
இந்த குடும்பம் எப்போதும் எக்காரணத்தை கொண்டும் பிரிய கூடாது என்று, எனது அப்பா எங்கள் உறவினர்கள் மத்தியில் கூறியுள்ளார். எனக்கு அப்போது 10 வயது இருக்கும். ஆனாலும், அவர் கூறியது நினைவில் உள்ளது. அதேபோலத்தான் எல்லோரும் இருந்தார்கள். எனது அத்தை மறையும்போது கூட இந்த குடும்பம் எக்காரணத்தை கொண்டும் பிரியக்கூடாது என்று என்னிடம் கூறினார். நாங்கள் எப்படி வாழ்ந்தோமோ அப்படி நீங்களும் வாழ வேண்டும் என அத்தை என்னிடம் சொன்னார். இதுவரை நான் வெளியே இதுபற்றி கூறியது இல்லை. இப்போதுதான் தெரிவிக்கிறேன். இவ்வாறு செல்வி உருக்கமாக தெரிவித்தார்.