ஏமனில் கொல்லப்பட்ட 2 தமிழர்களின் உடல்களை மீட்டுக் கொண்டு வர குடும்பத்தினர் கோரிக்கை
சென்னை: ஏமனில் நடந்த தாக்குதலில் பலியான 2 தமிழர்களின் உடல்களையும் மீட்டு கொண்டுவர வேண்டும் என்று மத்திய அரசுக்கு இருவரின் குடும்பத்தாரும் கோரிக்கை வைத்துள்ளனர். இதுதொடர்பாக மத்திய வெளியுறவுத்துறையும், ஏமன் அதிகாரிகளுடன் பேசி வருவதாக கூறப்படுகிறது.
ஏமன் நாட்டில் சன்னி பிரிவைச் சேர்ந்த அதிபர் மன்சூர் ஹைதி ஆதரவு படைகளுக்கும் ஷியா பிரிவைச் சேர்ந்த ஹவுத்தி கிளர்ச்சிப் படையினருக்கும் இடையே கடும் சண்டை நடைபெற்று வருகிறது. இதில் ஏமன் அதிபர் அதிபர் ஹைதிக்கு ஆதரவாக சவுதி அரேபிய ராணுவம், ஹவுத்தி கிளர்ச்சிப் படை மீது தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது.
தற்போது ஏமனின் பெரும்பகுதி கிளர்ச்சிப் படையின் கட்டுப்பாட்டில் உள்ளது. அதிபர் ஹைதி, சவுதியில் தஞ்சம் அடைந்துள்ள நிலையில் அவரது ஆதரவாளர்கள் துறைமுக நகரான ஏடனை தலைநகராகக் கொண்டு ஆட்சி நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த சனிக்கிழமை மாலை சவூதி அரேபியா-ஏமன் எல்லையில் போர் நிறுத்த ஒப்பந்தத்தையும் மீறி ஏமன் படையினரும், கிளர்ச்சியாளர்களும் மாறி மாறி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியத்தில் இரு தரப்பிலும் பெண்கள், குழந்தைகள் உட்பட 75 பேர் வரை பலியாகி இருக்கின்றனர். இதில்தான் தமிழகத்தைச் சேர்ந்த முகம்மது கில்பி மற்றும் அந்தோணி ஆகிய இருவரும் உயிரிழந்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியைச் சேர்ந்தவர் கில்பி. அதேபோல விழுப்புரம் மாவட்டம் எக்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் அந்தோணி. இருவரது குடும்பத்தினரும் தற்போது பெரும் அதிர்ச்சி மற்றும் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.
இருவரும் கடந்த 3 வருடங்களாக ஏமனில் வேலை பார்த்து வந்தனர். தங்களது குடும்பத்துக்கு மாதம் ரூ. 18,000 அனுப்பி வந்தனர். இதை நம்பித்தான் இருவரது குடும்பங்களும் இருந்து வந்தன. தற்போது வருமானம் போனதை விட தங்களைக் காத்து வந்தவர்களை இழந்த சோகம்தான் அவர்களை பெரிதாக வாட்டி வருகிறது.
தற்போது இருவரது உடல்களையும் கொண்டு வருவதில் பெரும் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. ஏமனில் தற்போது நிலைமை சரியில்லை. இந்த நிலையில் இருவரது உடல்களையும் இந்தியாவுக்கு அனுப்பி வைப்பது கடினம் என்று இருவரும் வேலை பார்த்து வந்த நிறுவனத்தின் உரிமையாளர்கள் கூறி விட்டனராம். இருப்பினும் மத்திய அரசு தொடர்ந்து முயற்சித்து வருவதாக தெரிகிறது.
இதுகுறித்து வெளியுறவுத்துறை அதிகாரிகள் கூறுகையில், இதுகுறித்து உரிய அதிகாரிகளுடன் பேசி வருகிறோம். மிகவும் கடினமான சூழலே நிலவுகிறது. இருப்பினும் தொடர்ந்து பேசி வருகிறோம். இருவரது உடல்களையும் மீட்டுக் கொண்டு வர ஏற்பாடுகள் செய்து வருகிறோம் என்றனர்.