தவறான சிகிச்சையால் இளம்பெண் பலி - போலி டாக்டருக்கு சராமரி அடி
நாங்குநேரி அருகே போலி டாக்டர் அளித்த தவறான சிகிச்சையால் இளம் பெண் ஒருவர் பலியானார்.
நெல்லை: நாங்குநேரி அருகே தவறான மருத்துவ சிகிச்சையால் இளம்பெண் பலியானார். இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் அவரை வெளுத்து வாங்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டம் மூலக்கரைப்பட்டி அருகே கல்லத்தி கிராமத்தை சேர்ந்தவர் உஷாராணி. பிளஸ்டூ படித்துள்ள இவர் மூலக்கரைப்பட்டியில் உள்ள ஜவுளி கடையில் வேலை பார்த்து வந்தார்.
இந்நிலையில் உடல் நிலை பாதிக்கப்பட்டதால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
பின்னால் வீடு திரும்பிய உஷா ராணி திடீரென மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவரது உறவினர்கள் அதிர்ந்தனர்.
இதுகுறித்து உஷாராணியின் அப்பா ஆறுமுகம் மூலக்கரைப்பட்டி போலீசில் புகார் கொடுத்தார். இதற்கிடையே உஷாராணிக்கு உயிர் இருப்பதாக அப்பகுதியில் கூறியதை தொடர்ந்து உஷா ராணியை நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். அந்த செய்தியை அறிந்த பொதுமக்கள் அந்த மருத்துவமனைக்கு விரைந்து சென்று போலி டாக்டர் ஜெயராணியை அடித்து உதைத்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து போலி டாக்டர் ஜெயராணி தப்பி ஓடி விட்டாராம்.
இதற்கிடையே மூலக்கரைபட்டியை சேர்ந்த மக்கள் நல மருத்துவமனை டாக்டர் ஜெயராணி மீது போலீஸ் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் திடீரென போராட்டத்தில் குதித்தனர். அவர்களிடம் நாங்குநேரி ஏஎஸ்பி அருண்கோபாலன் தலைமையிலான போலீசார் பேச்சு வார்த்தை நடத்தினர். பின்னர் ஜெயராணி மற்றும் மற்றொரு டாக்டர் தங்கராஜ் ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.