முற்போக்கு எழுத்தாளர் மேலாண்மை பொன்னுசாமி காலமானார்
சாகித்ய அகாடமி விருது பெற்ற முற்போக்கு எழுத்தாளர் மேலாண்மை பொன்னுசாமி உடல்நலக்குறைவால் காலமானார்.
விருதுநகர் : பிரபல முற்போக்கு எழுத்தாளர் மேலாண்மை பொன்னுசாமி உடல்நலக்குறைவு காரணமான காலமானார். அவருக்கு வயது 66
விருதுநகர் மாவட்டம் மேலாண்மறைநாடு என்ற கிராமத்தில் பிறந்தவர் பொன்னுசாமி. ஏழைக் குடும்பத்தில் பிறந்த இவர் வறுமையின் காரணமாக 5-ம் வகுப்புக்கு மேல் படிக்க முடியவில்லை.இவருக்கு 10 வயதானபோது தந்தை இறந்துவிட்டார். அப்போதே குடும்பப் பொறுப்பு முழுவதையும் ஏற்றுக்கொண்டார்.
கிராமத்தில் உள்ள சிறிய மளிகைக் கடையை நடத்துவதே இவரது பிரதான தொழில். இவருக்கு மனைவி பொன்னுத் தாய் மற்றும் 2 மகள்கள், 1 மகன் உள்ளனர்.5-ம் வகுப்புக்கு மேல் படிக்க முடியாவிட்டாலும் நூல்களை வாசிப்பதை இவர் நிறுத்தவில்லை. குறிப்பாக இலக்கிய நூல்களை அதிகம் படித்தார். இடதுசாரி இலக்கிய அமைப்புகளுடன் ஏற்பட்ட தொடர்பால் இவர் எழுதத் தொடங்கினார்.
1972ல் முதன்முதலில் செம்மலர் இதழில் பரிசு என்ற சிறுகதையை எழுதினார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கத்திலும் முக்கிய பொறுப்பு வகித்த பொன்னுசாமி 36 புத்தகங்களை எழுதியுள்ளார். இவற்றில் 22 சிறுகதைத் தொகுப்புகள், 6 நாவல்கள், 6 குறுநாவல் தொகுப்புகளாகும்.
இவரது கதைகள் பல்வேறு இலக்கிய பத்திரிகைகள் மட்டுமின்றி, ஜனரஞ்சக பத்திரிகைகளிலும் வெளியாகியுள்ளன.
மேலாண்மை பொன்னுசாமி தமிழக சிறுகதை, மற்றும் புதின எழுத்தாளரும் கூட அன்னபாக்கியன், அன்னபாக்கியச்செல்வன், ஆமார்நாட்டான் என்ற புனைப்பெயர்களிலும் எழுதியுள்ளார்.
இவர் எழுதிய மின்சாரப்பூ என்ற சிறுகதைத் தொகுப்பு நூல் 2007 ஆண்டிற்கான சாகித்திய அகாதமி விருதைப் பெற்றுள்ளது. உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த பொன்னுசாமி இன்று காலையில் தன்னுடைய பேனாவிற்கு விடுதலை கொடுத்து காலமாகியுள்ளார்.