ரஜினி அரசியலுக்கு வர வலியுறுத்தி பறவை காவடி எடுத்த ஆண்டிபட்டி ரசிகர்
ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டும் என்பதற்காக அவரது ரசிகர்கள் முதுகில் அலகு குத்தி கொண்டு நேர்த்தி கடன்களை செய்தனர்.
நெல்லை : நடிகர் ரஜினிகாந்த் வெகு விரைவில் அரசியல் பிரவேசம் குறித்த அறிவிப்பை வெளியிட வேண்டும் என்பதற்காக அவரது ரசிகர்கள் முதுகில் அலகு குத்தி கொண்டு முன்கூட்டியே நேர்த்தி கடனை செலுத்தியுள்ளனர்.
நடிகர் ரஜினிகாந்தை அரசியலுக்கு வருமாறு அவரது ரசிகர்கள் நீண்ட நாள்களாக அழைத்து வருகின்றனர். ஆனால் அவர் சற்றும் பிடிகொடுக்காமல் இருந்தார்.
இந்நிலையில் கடந்த மே மாதம் ரசிகர்களை ரஜினி சந்தித்த போது தமிழகத்தில் சிஸ்டம் சரியில்லை. தனக்கு பேர், புகழ், வசதி, பணம் கொடுத்த மக்களுக்கு தான் நல்லது செய்ய வேண்டும். போர் வரட்டும் பார்த்து கொள்ளலாம் என்றார்.
மகிழ்ச்சியில் திளைத்த ரசிகர்கள்
இதன் மூலம் ரஜினிஅரசியலுக்கு வருவது என்பது சூசகமாக கூறிவிட்டதால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் அன்று கூறியதோடு சரி. அது குறித்து அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து தெரியாமல் ரசிகர்கள் குழப்பம் அடைந்தனர்.
ஆயத்த பணிகள்
கட்சியைத் தொடங்குவதற்கான ஆயத்தப் பணிகள் அனைத்தும் நடைபெற்று வருவதாகவும் வெகு விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் ரஜினி தரப்பு கூறுகிறது. நாள்கள் கடந்து கொண்டே வருவதால் ரசிகர்கள் பூஜை புனஸ்காரங்களில் நாட்டம் செலுத்தி வருகின்றனர்.
அன்னதானம்
தேனி மாவட்டத்தை சேர்ந்த ரஜினி ரசிகர்கள் அவர் விரைவில் அரசியலுக்கு வர வேண்டும் என்று கோயிலில் வேண்டி கொண்டு அன்னதானம் அளித்தனர். அந்த இடத்தில் ரஜினியை புகழும் வகையிலான பதாகைகள் வைக்கப்பட்டிருந்தன.
அலகு குத்தி முன்-நேர்த்திக் கடன்
ரஜினிகாந்த் ஆண்டிபட்டி தொகுதியில் போட்டியிட்டு தமிழக முதல்வராக வேண்டி ரசிகர் முருகவேல் முதுகில் அலகு குத்திக் கொண்டு பறவைக் காவடி எடுத்தார். அப்போது தலைவா வா வா என்ற பதாகைகளை வைத்திருந்தனர்.