உலக நாயகனை சீண்டாதே... கமலுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் போஸ்டர்
நடிகர் கமலுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அரசியலுக்கு வரச்சொல்லி கமலை அவரது ரசிகர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
சென்னை: வாக்களித்தவனுக்கு கேட்கும் உரிமை கிடையாதா? சுயநலபோதையில் திரியும் நீங்கள் பொதுநலப் பார்வையில் பேசிய ஒரு சாமானியரை உலக நாயகனை சீண்டி பார்க்காதே என்று கமல் ரசிகர்கள் தமிழகத்தின் பல பகுதிகளில் போஸ்டர் ஒட்டியுள்ளனர். கமலை அரசியலுக்கு வரச்சொல்லி அவரது ரசிகர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
நடிகர் கமலஹாசன் கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழக அரசின் மீது ஊழல் குற்றச்சாட்டு கூறி இருந்தார். இதற்கு அமைச்சர்கள் ஜெயக்குமார், அன்பழகன், சண்முகம் ஆகியோர் கண்டனம் தெரிவித்ததுடன் கடுமையான வாசகங்களையும் பயன்படுத்தினர்.
இதனையடுத்து கமலுக்கும் தமிழக அரசுக்கும் இடையே கண்டன மோதல்கள் தினந்தோறும் நடந்து வருகிறது. தமிழக அரசு மீது ரசிகர்கள் தங்களுக்கு உள்ள அதிருப்தியை தெரிவிக்கும் வகையில் அமைச்சர்களுக்கு ஊழல் குற்றச்சாட்டுகளை அனுப்ப வேண்டும் என கமல் கூறி இருந்தார்.
கமல் என்ன சமூக சேவை செய்தார் அரசியலுக்கு வர ஆசைப்படுகிறார் என்று தமிழக பாஜக தலைவி தமிழிசை தொடங்கி தமிழக அமைச்சர்கள் வரை கருத்துக்களை தெரிவித்தனர். இதற்கு கமல் ரசிகர்கள் கொந்தளித்து போயுள்ளனர். கமலை அரசியலுக்கு வரவேற்று போஸ்டர்களை ஒட்டியுள்ளனர்.
|
நாங்கள் செய்யாத சேவையா?
ராசிபுரம் எங்கள் கோட்டை, சென்னை எங்கள் பேட்டை, உயர்த்துவோம் தமிழ் நாட்டை என்று போஸ்டர் ஒட்டியுள்ளனர் ராசிபுரம் ரசிகர்கள்.
|
உலக நாயகனே
மதுரை நகரம் முழுக்க கமலை அரசியலுக்கு வரக் கூறி அவரது ரசிகர்கள் போஸ்டர் ஒட்டியுள்ளனர். தோற்றால் போராளி... முடிவெடுத்தால் முதல்வர்... இனி உலக நாயகனின் அரசியல் விஸ்வரூப ஆட்டம் ஆரம்பம். தமிழகமே காத்திருக்கிறது வா தலைவா என்று போஸ்டர் ஒட்டி அழைத்துள்ளனர்.
திண்டுக்கல் பரபரப்பு
திண்டுக்கல் அருகில் உள்ள வத்தலக்குண்டுவில் நடிகர் கமலஹாசன் ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டரில் வாக்களித்தவனுக்கு கேட்கும் உரிமை கிடையாதா? சுயநலபோதையில் திரியும் நீங்கள் பொதுநலப் பார்வையில் பேசிய ஒரு சாமானியரை உலக நாயகனை சீண்டி பார்க்காதே என்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.
விளம்பரம் தேவையில்லை
அ.தி.மு.க. எம்.எல்.ஏ. மற்றும் அமைச்சரை அந்த தொகுதி மற்றும் அந்த ஊரை தாண்டி யாருக்கும் தெரியாது. ஆனால் கமல் உலகம் முழுவதும் உள்ள தமிழ் ரசிகர்களுக்கு பழக்கமானவர். அவருக்கு விளம்பரம் தேவையில்லை என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
புதுக்கோட்டையில் அழைப்பு
புதுக்கோட்டை மாவட்ட கமல் நற்பணி மன்றத்தை சேர்ந்த ரசிகர்கள் கமலை அரசியலில் குதிக்கும்படி அழைப்பு விடுத்துள்ளனர். மாவட்டம் முழுவதும் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள், பேனர்களைத் தாண்டி சமூக வலைத்தளத்திலும் இந்த போஸ்டர் டிரெண்டாகி வருகிறது..