கடையநல்லூர் தாலுகா அலுவலத்தினுள் தீக்குளிக்க முயன்றவரால் பரபரப்பு : போலீஸ் விசாரணை
கடையநல்லூர் தாலுகா அலுவலத்தினுள் தீக்குளிக்க முயன்றவரால் பரபரப்பு : போலீஸ் விசாரணை
நெல்லை: தன்னை வேண்டுமென்றே அதிகாரிகள் அலைக்கழிப்பதாகக் கூறி விவசாயி ஒருவர் நெல்லை மாவட்டத்தில் உள்ள கடையநல்லூர் தாலுகா அலுவலகத்தினுள் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நெல்லை மாவட்டம் தென்காசி அருகிலுள்ள சுந்தரபாண்டியபுரத்தை சார்ந்தவர் வைரவன் மகன் மாடசாமி. இவர் அப்பகுதியில் விவசாயம் செய்து வருகிறார். இவரது முன்னோர்களுக்கு சுரண்டை அருகிலுள்ள சாம்பவர் வடகரையில் சில ஏக்கர் நிலம் இருந்துள்ளது.
அந்த நிலங்களை வைரவன் குடும்பத்தினர் சுமார் 50ஆண்டுகளுக்கு முன்னரே பராமரிக்காமல் அப்படியே விட்டு விட்டனர். தற்போது வைரவன் மகன் மாடசாமி அந்த நிலத்தின் யூடிஆர் (பழைய சர்வே )தாஸ்வேஜாக்களை கேட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு செய்துள்ளார்.
இந்நிலையில் அந்த மனுமீது நடவடிக்கை எடுக்க கடையநல்லூர் தாலுகா அலுவலகத்திற்கு செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளனர். இதனால் அவர் இன்று கடையநல்லூர் தாலுகா அலுவலகத்திற்கு சென்றுள்ளார்.அங்கு சென்று இது குறித்து அதிகாரிகளிடம் கேட்டுள்ளார்.
அவர்கள் பணம்கட்டி மனுகொடுங்கள் என்று கூறியதாக கூறப்படுகிறது.இதனைத்தொடர்ந்து அந்த விவசாயி தன்னை அதிகாரிகள் வேண்டுமென்று அலைய வைப்பதாக கூறி தாலுகா அலுவலகத்திற்குள் கையேடு கொண்டு வந்திருந்த மண்ணென்னையை தலையில் ஊற்றி தீவைக்க முயன்றார்.
அப்போது அங்கிருந்த தாலுகா அலுவலக பணியாளர்கள் அவரது கையிலிருந்த மண்ணென்னை பாட்டிலை தட்டிவிட்டு தண்ணீரை ஊற்றி அவரை கடையநல்லூர் போலீசில் ஒப்படைத்தனர்.இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.