சிமெண்ட் ஆலைகளால் தண்ணீர் பஞ்சம்.. செல்போன் டவரில் ஏறி விவசாயி தற்கொலை மிரட்டல்: அரியலூரில் பரபரப்பு
அரியலூரில் நிலவி வரும் தண்ணீர் பஞ்சத்தை போக்க வேண்டும் என்று வலியுறுத்தி செல்போன் டவரில் ஏறி விவசாயி தற்கொலை மிரட்டல் விடுத்தார்.
அரியலூர்: அரியலூரில் சிமெண்ட் ஆலைகளால் தண்ணீர் தட்டுப்பாடு அதிக அளவில் ஏற்பட்டு வருவதாகக் கூறி விவசாயி வீரபாண்டியன் செல்போன் டவரில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தார். நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நடத்தியும் அவர் கீழே இறங்கி வராததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள இலங்கச்சேரி கிராமத்தை சேர்ந்தவர் 47 வயதான வீரபாண்டியன். விவசாயியான இவர் இன்று காலை செந்துறை போலீஸ் நிலையம் அருகே உள்ள செல்போன் டவரில் ஏறி கடகடவென ஏறினார். பின்னர், டவரில் நின்று கொண்டு தற்கொலை செய்யப் போவதாக மிரட்டல் விடுத்தார்.
உடனே செந்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாநிதி மற்றும் போலீசார் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் தீயணைப்பு வீரர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
குடிநீர் பஞ்சம்
டவர் மேல் நின்று கொண்டு, விவசாயி வீரபாண்டியன், செந்துறை பகுதியில் சரியாக குடிநீர் விநியோகம் செய்யப்படுவதில்லை என்றும் திட்டப்பணிகள் எதுவும் நடைபெறாமல் அனைத்தும் முடங்கி கிடக்கிறது என்றும் குற்றம்சாட்டினார்.
தற்கொலை மிரட்டல்
எனவே, இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இல்லையென்றால் செல்போன் டவரில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொள்வேன் என்றும் மிரட்டல் விடுத்தார். இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார் அவரிடம் சமாதான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.
பரபரப்பு
நீண்ட நேரம் போராட்டத்திற்கு பின்னர், உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி வழங்கிய பின்னர், வீரபாண்டியன் செல்போன் டவரில் இருந்து இறங்கி கீழே வந்தார். பின்னர், அவர் விசாரணைக்காக போலீஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் இன்று காலை பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மீண்டும் போராட்டம்
பின்னர், செய்தியாளர்களிடம் வீரபாண்டியன் பேசும் போது, "சிமெண்ட் ஆலைகளால் எல்லா கிராமங்களுக்கும் குடிநீர் பற்றாக்குறை நிலவி வருகிறது. இதனால் நிலத்தடி நீரின் அளவு மிகவும் குறைந்துள்ளது. மக்களுக்கு குடிநீர் மிக அவசியம். ஒரு வாரத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை என்றால் மீண்டும் போராட்டத்தில் ஈடுபடுவேன் என்று தெரிவித்தார்.