கருகிய பயிர்களைக் கண்ட விவசாயி தூக்குப் போட்டு தற்கொலை- மாரடைப்பில் மற்றொருவர் பலி
திருவாரூர் மாவட்டத்தில் வயலில் கருகிய நெற்பயிர்களைக் கண்டு மனமுடைந்த விவசாயி விஜயகுமார் என்பவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
திருவாரூர் / தூத்துக்குடி: தமிழகத்தில் பருவமழை பொய்து போனதால் வறட்சி தாண்டவமாடுகிறது. குளங்கள், நீர்நிலைகள் வறண்டுவிட்டனர். சாகுபடி செய்யப்பட்ட பயிர்கள் தொடர்ந்து பல இடங்களில் தண்ணீர் இல்லாமல் கருகி வருகின்றன. இதனால் விவசாயிகள் மனமுடைந்து மாண்டு வருகின்றனர்.
மன வேதனையில் இதுவரை 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் மரணமடைந்துள்ள நிலையில் தற்போது மேலும் ஒரு விவசாயி தற்கொலை செய்து கொண்டுள்ளார். திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே வங்கத்தான்குடியில் ஒன்றரை ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர் கருகியதால் மனமுடைந்து விஜயகுமார் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
நேற்று கயத்தார் அருகே வாகைத்தாவூர் மேலத்தெருவை சேர்ந்த விவசாயி மாரடைப்பில் மரணமடைந்தார். தனக்கு சொந்தமான மானவரி நிலத்தில் மக்காசோளம் பயிர் செய்திருந்தார். இதற்காக கயத்தார் வங்கியில் நகைகளை அடகு வைத்தும், உறவினர்களிடம் கடன் வாங்கியிருந்தார். ஆனால் போதிய அளவு மழை இல்லாததால் செடிகள் வாட தொடங்கின. இதை பார்த்த அவர் கடந்த சில தினங்களாக மனம் உடைந்த நிலையில் இருந்தார்.
இந்நிலையில் நேற்று மாலை தோட்டத்திற்கு சென்ற வேலு பயிர்கள் வாடிய தூக்கம் தாங்காமல் அங்கேயே மயங்கி விழுந்தார். அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு வீட்டுக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிறிது நேரத்திலேயே மாரடைப்பால் அவர் பரிதாபமாக இறந்து போனார். இதனால் அந்தபகுதி கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.
தண்ணீரின்றி கருகும் பயிர்களைக் கண்டு விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதும் மரணமடைவதும் அதிகரித்து வருகிறது. தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், நிவாரணம் அறிவிக்க வேண்டும் என்பதே விவசாயிகளின் எதிர்பார்ப்பாகும்.