கந்துவட்டி கொடுமை.. அரியலூரில் விவசாயி விஷம் குடித்து தற்கொலை
கந்துவட்டி கொடுமையால் அரியலூரை சேர்ந்த விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து இருக்கிறார்.
அரியலூர்: கந்துவட்டி கொடுமையால் அரியலூரை சேர்ந்த விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து இருக்கிறார்.
அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே உள்ள பெரியமறை கிராமத்தைச் சேர்ந்த விவசாயி மாணிக்கம். இவர் தனது வயலின் பேரில் ஏலாக்குறிச்சியை சேர்ந்த நாச்சிமுத்து என்பவரிடம் கடன் வாங்கியுள்ளார்.
கடந்த 2005ஆம் ஆண்டு தனக்கு சொந்தமான 1.75 ஏக்கர் நிலத்தை ஈடாக வைத்து ரூபாய் 1 லட்சத்தி 75 ஆயிரம் கந்துவட்டிக்கு வாங்கியுள்ளார். வாங்கிய கடனை கடந்த 2012ம் ஆண்டு திருப்பிக்கொடுக்கச்சென்ற மாணிக்கத்திடம் வட்டியுடன் சேர்த்து 10 லட்சம் தரவேண்டும் என நாச்சிமுத்து கூறியுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த மாணிக்கம் தன்னிடமிருந்த 1 லட்சத்தி 50 ஆயிரம் கொடுத்துவிட்டு வந்துள்ளார். கடனுக்கு பதிலாக அவரின் நிலத்தை நாச்சிமுத்து அபகரித்து இருக்கிறார்.
இந்நிலையில் நாச்சிமுத்து கடனுக்கு ஈடாக வாங்கிய நிலத்தை பறித்துக்கொண்டதாக திருமானூர் காவல்நிலையத்தில் சில மாதங்களுக்குமுன் புகார் செய்து உள்ளார். ஆனால் போலீஸ் இதில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனால் மனமுடைந்த மாணிக்கம் தனது வயலில் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.