காவிரி டெல்டாவில் தொடரும் மரணம்.. தஞ்சையில் மேலும் ஒரு விவசாயி விஷம் குடித்து தற்கொலை
காய்ந்துப் போன காவிரி டெல்டா பகுதியான தஞ்சையில் இன்று மேலும் ஒரு விவசாயி தற்கொலை செய்து கொண்டார். 3 ஏக்கர் நெற்பயிர் காய்ந்து கருகியதால் மன உடைந்து விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார் முருகானந்தம்
தஞ்சை: வறட்சியின் காரணமாக தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இன்றும் தஞ்சையைச் சேர்ந்த விவசாயி முருகானந்தம் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
தஞ்சை மாவட்டம் ஆலங்குளத்தைச் சேர்ந்தவர் விவசாயி முருகானந்தம். 32 வயதான இவருக்கு 3 ஏக்கர் விவசாய நிலம் இருக்கிறது. இந்த நிலத்தில் அவர் நெல் பயிர்களை விளைவித்திருந்தார். பருவ மழைப் பொய்த்துப் போனதால் நெற்பயிர் முழுவதும் காய்ந்து கருகிவிட்டது. இதனால் கடந்த சில நாட்களாக விவசாயி முருகானந்தம் மன வேதனையுடன் இருந்துள்ளார்.
இந்நிலையில், இன்று வயலுக்கு அடிக்க வைத்திருந்த மருந்தை முருகானந்தம் குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். இதனைக் கண்ட அவரது உறவினர், மருத்துவமனைக்கு அவரை அழைத்துச் சென்றனர். அங்கு அவர் இறந்துவிட்டார் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். பயிர்கள் கருகிய மனவேதனையிலேயே விவசாயி முருகானந்தம் இந்த முடிவை எடுத்திருக்கிறார் என்று அவரது உறவினர்கள் தெரித்தனர்.
தமிழகம் முழுவதும் வறட்சியின் காரணமாக 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை மற்றும் மாரடைப்பு மரணங்கள் நடந்துள்ளன. வறட்சியால் விவசாயிகள் மரணம் அடைவதை தமிழக அரசு உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் இறந்தவர்களின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் பொதுமக்களும், விவசாயிகளும் கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால், அதுகுறித்து தமிழக அரசு இன்னும் எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.