கொடுமை.. பயிர் கருகியதால் மனம் உடைந்த விவசாயி தீக்குளித்து தற்கொலை.. திருவாரூரில் சோகம்
நீரின்றி பருத்தி கருகியதால் மனம் உடைந்த விவசாயி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இதனால் திருவாரூரில் பதற்றம் நிலவி வருகிறது.
திருவாரூர்: நீர் இல்லாமல் பயிர்கள் காய்ந்த மனவேதனையில் விவசாயி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். டெல்டா மாவட்டங்களில் தொடர்ந்து விவசாயிகளின் தற்கொலை நடைபெற்று வருவது விவசாயிகளிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் மாவட்டம் காப்பணாமங்கலம் என்ற கிராமத்தில் வசித்து வந்தவர் ரமேஷ். 45 வயதான இவர் ஒரு விவசாயி. தனது ஒரு ஏக்கர் நிலத்தில் பருத்தி சாகுபடி செய்திருந்தார்.
கடந்த ஆண்டு இரண்டு பருவமழைகளும் பொய்த்துப் போனது. மேலும் காவிரி நீரும் நமக்கு கிடைக்கவில்லை. இதனால் நீரின்றி பயிர் அத்தனையும் கருகியுள்ளது. இதனால் மன வேதனையில் ரமேஷ் இருந்ததாகக் கூறப்படுகிறது.
அடகு வைத்த நகை
இருக்கும் குறைந்த அளவு நீரில் பயிர் சாகுபடி செய்துவிடலாம் என்று எண்ணிய விவசாயி ரமேஷிற்கு இது பெரிய ஏமாற்றத்தை அளித்துள்ளது. மேலும் நகைகளை அடகு வைத்தே விவசாயத்திற்கான செலவுகளை செய்துள்ளார்.
தீக்குளித்து தற்கொலை
இந்நிலையில் விவசாயி ரமேஷ், கொல்லைப்புறத்திற்கு சென்று மண்ணெண்ணெய் தனது உடல் மேல் ஊற்றி தீக்குளித்து தற்கொலை கொண்டார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள் அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர்.
பிரேத பரிசோதனை
ஆனால், அவர் உயிர் பிரிந்து விட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். தற்போது அரசு மருத்துவமனையில் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
தொடர் தற்கொலை
இந்த தற்கொலை பற்றி குடவாசல் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே 400க்கும் மேற்பட்ட விவசாயிகள் வறட்சி பலியாகியுள்ள நிலையில், ரமேஷின் இறப்பு விவசாயிகளை கவலை அடையச் செய்துள்ளது.