EXCLUSIVE: 17 ஊருணிகள் மிஸ்ஸிங்.. கண்டுபிடிச்சு தாங்க.. 2 வருடமாக போராடும் தனி ஒருவன்!
17 ஊருணிகளை கண்டுபிடித்து தரும்வரை அறப்போராட்டம் தொடரும் என இருளன் கூறியுள்ளார்.
பரமக்குடி: "17 ஊருணிகளை காணோம், கண்டுபிடிச்சு தர்றீங்களா?" என்று தர்ணா, அறப்போர், வீடு வீடாக சென்று நோட்டீஸ் வழங்குவது என்று பரமக்குடியில் பல கட்ட வேலைகளை இழுத்து போட்டு செய்து வருகிறார் இருளன் என்கிற 'தனி ஒருவன்'.
யார் இந்த இருளன்? 17 ஊருணிகள் எங்கே போயிற்று? என்று விசாரிக்க இருளனை தேடினால், பரமக்குடி ரயில்வே ஸ்டேஷன், பஸ் ஸ்டேஷன் என்று ஒரு இடம் விடாமல் பொதுமக்களுக்கு நோட்டீஸ் கொடுத்து கொண்டிருந்தார். அவரிடம் "ஒன் இந்தியா தமிழ்" சார்பாக பேசினாம்.
கேள்வி: என்னதான் சார் உங்க பிரச்சனை? அதென்ன 17 ஊருணிகள்?
நான் பாம்பூர் கிராமத்தைச் சேர்ந்தவன். விவசாயி. பரமக்குடி நகராட்சியில் 35 வருஷங்களுக்கு முன்பு 17 ஊரணிகள் இருந்தது. நல்ல நீர் நிலையுடன் இருந்தப்போ, எங்க ஊருக்கே குடிநீர் தேவை பூர்த்தியானது. ஆனால் காலப்போக்கில், எங்கு பார்த்தாலும் தண்ணீராக காட்சியளித்த அந்த 17 ஊரணிகளும் ஆக்கிரமிப்பாளர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு விட்டது. அந்த இடங்களில் எல்லாம் பல கோடி மதிப்பில் பெரிய பெரிய பங்களாக்கள், மாடி வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இதில் மழையும் சரியா பெய்யாம குடிநீருக்கும் கஷ்டமா போயிடுச்சு. கால்நடைகளும் ரொம்பவே அவதிப்பட்டு வருகின்றன. அதனால்தான் 17 ஊருணிகளை காணோம், கண்டுபிடித்து தாங்கள் என்ற கோரிக்கையை தொடங்கியுள்ளேன்.
கேள்வி: ஊருணிகளை கண்டுபிடிக்க எந்த மாதிரியான நடவடிக்கைகளை இதுவரை நீங்கள் எடுத்திருக்கிறீர்கள்?
நான் இதை 2 வருடமாக கையில் எடுத்திருக்கிறேன். நகராட்சி நிர்வாகத்தில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் அதற்குரிய தொகையையும் செலுத்தி தகவல் கேட்டேன். நகராட்சி நிர்வாகத்தினர் பரமக்குடி நகராட்சிக்குட்பட்ட இடங்களில் உள்ள 17 ஊரணிகளின் பட்டியலை தந்தார்கள். அதனை வைத்து நான், 2016 -ல் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் ரிட் மனு ஒன்றை தாக்கல் செய்தேஙன். இதனை விசாரித்த நீதிபதியோ, நீர் நிலைகளை அகற்றுவதுடன் , அதற்கு காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கலாம் என உத்தரவும் பிறப்பித்தார். ஆனால் உத்தரவுக்கு பின்பு நீர் நிலைகளைக் கொண்ட 17 ஊரணிகளையும் சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் மீட்டெடுத்ததாக தெரியவில்லை. அதனால் கடந்த 10-நாட்களுக்கு முன்பு கூட கலெக்டர் ஆபீஸ் சென்று '17 ஊரணிகளை காணவில்லை. கண்டெடுத்து கொடுங்கள்' என கோரிக்கை வைத்து வலியுறுத்தினேன். அங்கேயே தர்ணாவிலும் ஈடுபட்டேன்.
கேள்வி: இப்போது எந்த அளவுக்கு உங்கள் கோரிக்கைக்கு செவிசாய்க்கப்பட்டு உள்ளது?
இப்போது, 17 ஊரணிகளின் வார்டு எண் , சர்வே எண், அளவு, ஆக்கிரமிக்கப்பட்ட ஊரணிகளின் பெயர் என 2 பக்கத்திற்கு ஒரு லிஸ்ட் ரெடி பண்ணிட்டேன். அதை தான் இப்போது பொதுமக்களிடம் கொண்டு சேர்த்து வருகிறேன். 2 பக்கத்திற்கு நீண்ட பட்டியலிட்டு நோட்டீஸ் தயார்படுத்தி பரமக்குடி நகரில் ஒரு இடம் பாக்கி இல்லாமல், ரயில்வே ஸ்டேஷன், பஸ் ஸ்டேன்ட், காய்கறி மார்க்கெட், மீன் மார்க்கெட், பஜார் தெருக்கள் என எல்லா இடங்களுக்கும் நானே நேரில் சென்று நோட்டீஸை கொடுத்து வருகிறேன். பட்டியலை படித்தும்தான் மக்களுக்கு குறிப்பாக இளைய தலைமுறைகளுக்கு அப்போதைய ஊரின் வளமும், தற்போதைய பாதிப்பும் புரிய வருகிறது.
கேள்வி: பொதுமக்களிடம் உங்களுக்கு எந்த மாதிரியான ரெஸ்பான்ஸ் இருக்கிறது?
வீடு வீடாக சென்றும் நோட்டீஸ் கொடுத்து வருவதால் கிட்டத்தட்ட பரமக்குடி மக்களுக்கே இந்த விவகாரம் தெரிந்துவிட்டது. அதனால் எங்கு பார்த்தாலும் இதே பேச்சாகத்தான் உள்ளது. விரைவில் எல்லோரும் ஒன்று சேர்ந்து எங்கள் 17 ஊருணிகளையும் திரும்பவும் கொண்டு வருவோம். எங்கள் ஊரின் தண்ணீர் பஞ்சத்தை போக்குவோம். அதுவரை என் தனிப்பட்ட ஒருவனின் அறப்போராட்டம் தொடர்ந்து கொண்டேதான் இருக்கும்.
இவ்வாறு விவசாயி இருளன் கூறினார்.
கமல்ஹாசனிடம் இந்த பிரச்சினையைக் கொண்டு செல்லலாம். பரமக்குடி என்பதற்காக மட்டுமல்ல, இதுபோன்ற மக்கள் பிரச்சினைகளில் அதிக ஆர்வம் காட்டுகிறார் கமல். மேலும் விசில் ஆப் மூலமும் இதுபோன்ற பிரச்சினைகளைக் கையில் எடுக்கிறார். கமல் ஹாசனின் மக்கள் நீதி மய்யமும் இதில் இணைந்தால் நிச்சயம் இருளனின் இந்த தேடுதலுக்கும் விடை கொடுக்கும், பரமக்குடிக்கும் ஒரு விடிவு கிடைக்கும்.