"2 முறை போர் போட்டும் வெள்ளாமைக்கு தண்ணி வரலையே” - விரக்தியில் விஷம் குடித்த மதுரை விவசாயி மரணம்!
மதுரை: மதுரை மாவட்டத்தில் விவசாயத்திற்காக இரண்டு முறை போர் போட்டும் தண்ணீர் வராத காரணத்தினால் விரக்தியடைந்த விவசாயி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி, தொட்டப்பநாயக்கனூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி பால்ராஜ். இவர் தனது 6 ஏக்கர் நிலத்தில் அவரை சாகுபடி செய்திருந்தார். இதற்கு தண்ணீர் குறைந்த காரணத்தினால் 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கி போர் போட்டிருக்கிறார். ஆனால் போர் போட்ட இடத்தில் தண்ணீர் வரவில்லை.
இந்நிலையில் அவர் நேற்று இரவு போர் போட்ட இடத்திலேயே விஷம் அருந்தி மயக்க நிலையில் கிடந்துள்ளார். அக்கம்பக்கத்தில் இருந்த உறவினர்கள் இதனை பார்த்து, உடனே உசிலம்பட்டி அரசு மருத்துமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அங்கு பால்ராஜை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
கடும் வறட்சியில் தவிக்கும் உசிலம்பட்டி பகுதியில் தண்ணீர் தேவைக்காக இருமுறை தன்னுடைய நிலத்தில் விவசாயி பால்ராஜ் போர் போட்டிருக்கிறார். இரண்டு முறை முயற்சிக்கு பிறகும் தண்ணீர் வராத விரக்தியில் அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிகிறது. இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் சோகம் நிலவி வருகின்றது.