26 அடி ஆழ மோட்டார் குழியில் விழுந்த விவசாயி உயிர் பிழைத்த அதிசயம்
நெல்லை: சங்கரன்கோவில் அருகே மோட்டார் குழியில் விழுந்த விவசாயி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள மருதப்பபுரம் கிராமத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். விவசாயி. இவர் அதே பகுதியில் உள்ள நெற்பயிற் சாகுபடி செய்யப்பட்ட நிலத்திற்கு உரமிடும் வேலைக்கு சென்றார். பணிகளை முடித்த பின்னர் வயலின் அருகில் இருந்த கிணற்று பம்ப் செட் அறையில் மூடைகளை வைப்பதற்காக சென்றார்.
பம்பு செட் அறையின் பெட் குழிக்கு மேலே போடப்பட்டிருந்த பலகையில் அவர் கால் வைத்த போது பலகை திடீரென முறிந்தது. இதனால் அவர் 26 அடி ஆழ மோட்டார் பெட் குழிககுள் தவறி விழுந்தார். அவரது அலறல் சத்தம் கேட்டவுடன் அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்ததுடன் சங்கரன்கோவில் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
நிலைய அதிகாரிகள் வீரராஜ், பார்வதிநாதன் ஆகியோர் தலைமையில் வீரர்கள் விரைந்து வந்து விவசாயி பாலகிருஷ்ணனை குழிக்குள் இருந்து உயிருடன் மீட்டனர்.
பி்ன்னர் அவர் 108 ஆம்புலன்ஸ் மூலம் பலத்த காயங்களுடன் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இதுகுறித்து சின்னகோவிலான்குளம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 26 அடி ஆழ குழிக்குள் விழுந்த விவசாயி அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.