தொடரும் சோகம்..வங்கி கடனை திருப்பி செலுத்த முடியாததால் இன்னுமொரு விவசாயி தற்கொலை
கோவை: மேட்டுப்பாளையத்தில் வங்கிக் கடனை திருப்பி செலுத்த முடியாமல் விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்த வடவள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் ராமசாமி (62), வங்கியில் கடன் பெற்று தனக்கு சொந்தமான நிலத்தின் ஒரு பகுதியில் பசுமைக்குடில் அமைத்து விவசாயம் செய்து வந்தார்.
இதற்காக தேசிய தோட்டக்கலை துறை மூலம் 50% மானியத்துக்கு விண்ணப்பித்திருந்தார். இந்த மானியம் கிடைக்கும் நம்பிக்கையில், கோவை சரவணம்பட்டியில் உள்ள வங்கியில் ரூ.70 லட்சம் கடன் பெற்றுள்ளார்.
இந்த தொகையை வைத்து, ராமசாமி தனது நிலத்தில் அமைத்த பசுமைக் குடிலில் காய்கறிகள் பயிர் செய்து வந்திருக்கிறார். அதில் பெரும் நஷ்டம் ஏற்பட்டதால், வங்கியில் பெற்ற கடனை அவரால் திருப்பிச் செலுத்த இயலவில்லை.
கடன் கொடுத்த வங்கி ஒரு கட்டத்தில் நெருக்கடி கொடுக்கவே, மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளான ராமசாமி, நேற்று முன்தினம் பூச்சி மருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனடியாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக, காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.