கருகிய பயிரைக் கண்டு அதிர்ச்சி.. ஆவடியில் விவசாயி விஷம் குடித்து தற்கொலை முயற்சி
கருகிய பயிர்களைக் கண்ட அதிர்ச்சியில் தற்கொலை செய்து கொள்ளும் துயரம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. ஆவடியில் விவசாயி குமார் விஷம் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள
சென்னை: தண்ணீர் இல்லாமல் பயிர்கள் கருகியதைக் கண்ட அதிர்ச்சியில்சென்னை ஆவடியைச் சேர்ந்த விவசாயி குமார் விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் வடகிழக்கு மழை வழக்கத்தைவிட 60 சதவீதம் குறைவாக பெய்துள்ளது. காவிரியில் இருந்து கிடைக்க வேண்டிய தண்ணீரும் முறையாக தமிழகத்திற்கு கிடைக்கவில்லை. இப்படி, இயற்கையாகவும், செயற்கையாகவும் உருவான தண்ணீர் தட்டுப்பாட்டால் தமிழகத்தில் வறட்சி நிலவி வருகிறது. இந்த வறட்சிக்கு இதுவரை 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர்.
இந்நிலையில், இன்று காலை ஆவடி அருகே உள்ள தண்டுரை என்ற கிராமத்தில் விவசாயி குமார் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். தனது வயலில் பயர்கள் காய்ந்து கருகியதைக் கண்டு மன வேதனையில், வயலுக்கு அடிப்பதற்காக வைக்கப்பட்டிருந்த பூச்சிக் கொல்லி மருந்ததை குடித்து தற்கொலை முயற்சியில் குமார் ஈடுபட்டார்.
விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்த விவசாயி குமாரை, அவரது உறவினர், அருகில் இருந்த மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
காவிரி டெல்டா பகுதிகளில் மட்டுமே நடந்து வந்த விவசாய தற்கொலைகளும், மாரடைப்பு மரணங்களும் மெல்ல தமிழகம் முழுவதும் பரவி வருகிறது. இதனால் விவசாயிகளின் மத்திய ஒரு வித அச்சம் நிலவி வருகிறது. தமிழக அரசு வறட்சி பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு நிவாரணத்தை அறிவிக்க உள்ளது என்றாலும், உயிரிழந்த விவசாயிகள் தொடர்பாக இன்னும் வாயே திறக்கவில்லை என்ற மனக்குமுறலில் உள்ளனர் விவசாயிகளும், அவர்களது குடும்பத்தினரும்.