ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் "பிரசாரம்" செய்ய புறப்பட்ட அய்யாக்கண்ணு தலைமையிலான விவசாயிகள்
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பாஜக வேட்பாளருக்கு எதிராக பிரசாரம் செய்ய அய்யாக்கண்ணு தலைமையிலான விவசாயிகள் திருச்சியிலிருந்து ஆர்.கே.நகருக்கு புறப்பட்டனர்.
திருச்சி: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளருக்கு எதிராக பிரசாரம் செய்ய அய்யாக்கண்ணு தலைமையிலான விவசாயிகள் திருச்சியிலிருந்து சென்னைக்கு புறப்பட்டனர்.
காவிரி நதி நீர் மேலாண்மை, பயிர் கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி கடந்த ஏப்ரல் மாதம் 80 நாள்களுக்கு மேல் டெல்லி ஜந்தர் மந்தரில் தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையிலான திருச்சி விவசாயிகள் பல்வேறு நூதன போராட்டங்களில் ஈடுபட்டனர்.
விரட்டியடித்த போலீஸார்
எனினும் இவர்களின் குறைகளை மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை. இவர்களை அழைத்தும் பேசவில்லை. இதையடுத்து ஊர் திரும்பிய அய்யாக்கண்ணு உள்ளிட்டோர் மீண்டும் ஜந்தர் மந்தரில் கடந்த மாதம் சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போதும் போலீஸாரால் விரட்டியடிக்கப்பட்டு ஊருக்கு அனுப்பப்பட்டனர்.
போட்டியிடும் கட்சிகள்
இந்நிலையில் ஆர்.கே.நகரில் இடைத்தேர்தல் வரும் 21-ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் அதிமுக, திமுக, பாஜக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சியினர் போட்டியிடுகின்றனர்.
வேட்புமனுதாக்கல் ஓவர்
ஆர்.கே.நகர் தேர்தலுக்காக வேட்புமனு தாக்கலுக்கான நாள் நேற்றுடன் நிறைவு பெற்றது. எனினும் கடந்த சில தினங்களுக்கு முன்பே அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகளின் வேட்பாளர்கள் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
|
அய்யாக்கண்ணு உள்ளிட்ட விவசாயிகள்
ஆர்.கே.நகரில் பாஜக வேட்பாளருக்கு எதிராக பிரசாரம் செய்ய அய்யாக்கண்ணு தலைமையிலான விவசாயிகள் திருச்சியிலிருந்து புறப்பட்டுள்ளனர். விவசாயிகளின் கோரிக்கைகளை காது கொடுத்துக் கூட கேட்காத மத்திய அரசை கண்டித்து பாஜகவுக்கு வாக்களிக்காதீர் என எலும்புக் கூடுகளுடன் பிரசாரம் செய்யவுள்ளனர்.