8 வழிச்சாலைக்கு எதிர்ப்பு.. 5 மாவட்டங்களில் விவசாயிகள் மனிதச் சங்கிலி போராட்டம்
8 வழிச்சாலையை எதிர்த்து சேலம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் மனிதச் சங்கிலி போராட்டம் நடத்திய விவசாயிகள் கைதாகியுள்ளனர்.
சேலம்: சென்னை - சேலம் 8 வழிச்சாலை திட்டத்தை எதிர்த்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சேலம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, காஞ்சிபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் மனிதச் சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை - சேலம் 8 வழிச்சாலை திட்டத்தால், ஆயிரம் ஏக்கருக்கு மேலான காடுகள், விளைநிலங்கள் அழிக்கப்படும் என்பதால் இந்த திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அரசியல் கட்சியினர், விவசாயிகள், பொதுமக்கள் போராடி வருகின்றனர். மேலும், 8 வழிச்சாலை திட்டத்தை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபடுபவர்களை போலீஸார் கைது செய்து வருகின்றனர்.
இந்நிலையில், சென்னை - சேலம் 8 வழிச்சாலை திட்டத்தை எதிர்த்து, இந்த சாலை அமைய உள்ள காஞ்சிபுரம், திருவண்ணாமலை, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 5 மாவட்டங்களில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் விவசாயிகளை ஒருங்கிணைத்து மனிதச் சங்கிலி போராட்ட நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில துணை செயலாளர் இந்திரஜித் தலைமையில், சேலம் மாநகராட்சி முன்பு 8 வழிச் சாலை திட்டத்தை எதிர்த்து விவசாயிகள் மனிதச் சங்கிலி போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். அதற்குள் மனிதச் சங்கிலி போராட்டத்தில் ஈடுபட முயன்ற அனைவரையும் போலீஸார் கைது செய்தனர். கைது செய்தவர்களை குண்டுக்கட்டாக தூக்கி வாகனத்தில் ஏற்றிச் சென்று திருமண மண்டபத்தில் சிறை வைத்தனர்.
இந்த மனிதச் சங்கிலி போராட்டம் குறித்து இந்திரஜித் கூறுகையில், 8 வழிச்சாலை திட்டம் இயற்கை வளங்களை அழித்து அமைக்கப்படுகிறது. இதை நாங்கள் ஆரம்பத்திலிருந்தே எதிர்த்து வருகிறோம். 8 வழிச்சாலை திட்டதை எதிர்க்கும் போராட்டத்தின் ஒரு கட்டமாக நாங்கள் அறவழியில் இந்த மனிதச் சங்கிலி போராட்டத்தை அறிவித்தோம். அதற்காக அனுமதியும் பெற்றோம். ஆனால், திடீரென போலீஸார் மனிதச் சங்கிலி போராட்டத்துக்கு அனுமதியில்லை என்று கூறி போராட்டத்துக்கு தடை விதித்தார்கள்.
நாங்கள் மனிதச் சங்கிலி போராட்டத்துக்கு ஏற்கெனவே அனுமதி பெற்றிருக்கிறோம். பிறகு ஏன் தடை விதித்தார் என்று தெரியவில்லை. ஆனால், நாங்கள் அறிவித்தபடி விவசாயிகள் மனிதச் சங்கிலி போராட்டத்தில் ஈடுபட முயன்றதால் போலீஸார் எங்களை பலவந்தமாக கைது செய்து வாகனத்தில் ஏற்றினார்கள்.