காவிரி மேலாண்மை வாரியம் அமையாததைக் கண்டித்து நாகையில் விவசாயிகள் மரத்தில் தூக்குப் போடும் போராட்டம்
காவிரி மேலாண்மை வாரியம் அமையாததைக் கண்டித்து நாகையில் விவசாயிகள் மரத்தில் தூக்குப் போடும் போராட்டம் நடத்தினர்.
நாகப்பட்டிணம்: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து நாகை மாவட்டத்தில் விவசாயிகள் மரத்தில் தூக்குப் போடும் போராட்டம் நடத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
காவிரி நதி நீர் பங்கீட்டு வழக்குத் தீர்ப்பில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் மத்திய அரசை வலியுறுத்தியது. அதற்கு ஆறு வார கால அவகாசமும் கொடுத்தது. உச்சநீதிமன்றம் கொடுத்த ஆறு வார கால அவகாசம் இன்றுடன் முடிவடைந்த நிலையில், இதுவரை மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவில்லை.
இதற்காக தமிழக அரசியல் கட்சிகள் மற்றும் விவசாயிகள் சார்பில் போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. இந்நிலையில், நாகை மாவட்டத்தில் விவசாயிகள் மத்திய அரசைக் கண்டித்து தூக்குப் போடும் போராட்டம் நடத்தினர்.
நாகை மாவட்டம் புதிய பேருந்து நிலையம் அருகே விவசாய சங்கத்தைச் சேர்ந்த விவசாயிகள் சிலர் மரத்தில் தூக்கு மாட்டி போராட்டம் நடத்தினர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் அங்கிருந்த ஆறு விவசாயிகளைக் கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.