மத்திய அரசு துரோகம்.. திருச்சியில், காவிரியில் குதித்து 35 விவசாயிகள் தற்கொலை முயற்சி
திருச்சி: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுத்த மத்திய அரசை கண்டித்து திருச்சியில், காவிரி ஆற்றில் குதித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட 35 விவசாயிகளை போலீசார் கைது செய்தனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உத்தரவிட முடியாது என்று சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு கூறியது. இதனைக் கண்டித்து, திருச்சி காவிரி ஆற்றில் குதித்து தற்கொலை முயற்சியில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர் ஈடுபட்டனர். இந்த சங்கத்தின் மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் ஒன்று கூடிய விவசாயிகள் நெற்றியில் பட்டை நாமமிட்டு, மேல் சட்டை அணியாமல், கழுத்தில் தூக்கு கயிறு மாட்டிக் கொண்டு காவிரி பாலத்துக்கு வந்தனர்.
பின்னர், மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியபடி விவசாயிகள் பாலத்தை நோக்கி வந்தனர். அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதனையடுத்து அம்மா மண்டபம் வரை பேரணியாக செல்ல போலீசார் அனுமதித்தனர். பின்னர், விவசாயிகள் அனைவரும் மத்திய அரசுக்கு எதிராக கோஷமிட்டபடி ஊர்வலமாக சென்றனர். அப்போது திடீரென அய்யாக்கண்ணு உள்ளிட்ட சில விவசாயிகள் காவிரி ஆற்றின் பாலதடுப்பு கட்டையில் ஏறி குதிக்க முயன்றனர்.
போலீசார் இதனை தடுத்து நிறுத்தினர். இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் போலீசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பியவாறு சாலையில் படுத்து உருண்டு மறியலில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து, அய்யாக்கண்ணு உள்பட 35 விவசாயிகளை போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து அய்யாக்கண்ணு கூறியதாவது: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் மத்திய அரசு அரசியல் நோக்கோடு நடக்கிறது. தமிழக விவசாயிகளை வஞ்சிக்கிறது. விவசாயிகளை தற்கொலைக்கு தூண்டி விட்டுள்ளது.
தமிழக விவசாயிகளின் நிலையை உணர்ந்து, மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க வேண்டும். இல்லை என்றால் அடுத்த கட்ட போராட்டம் பெரிய அளவில் நடத்தப்படும் என்று அய்யாகண்ணு கூறினார்.