பயிர் காப்பீட்டு தொகை வழங்குவதில் இழுபறி- கோவில்பட்டியில் விவசாயிகள் மறியல்
பயிர் காப்பீட்டு தொகை வழங்காமல் இழுத்தடித்து வருவதால் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தூத்துக்குடி: பயிர் காப்பீட்டு தொகை வழங்காமல் இழுத்தடிப்பதை கண்டித்து கோவில்பட்டியில் விவசாயிகள் தாலுகா அலுவலகம் முன்பு சாலையில் படுத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பருவமழை பொய்து போனதால் கடந்த இரு ஆண்டுகளாக விவசாயிகள் கஷ்டத்தில் இருந்து வருகின்றனர். இதற்கு பயிர் காப்பீட்டு தொகை வழங்க கோரி மானவரி விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். இதை உடனடியாக வழங்க கோரி கோவில்பட்டி அருகே கடந்த மாதம் 11ம் தேதி அடையாள போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து கோவில்பட்டி தாலுகா அலுவலகத்தில் சமாதான கூட்டம் நடந்தது. அதில் காப்பீட்டு தொகை விரைவில் வழங்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர். ஆனால் சொன்னபடி இதுவரை காப்பீட்டு தொகை வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
காப்பீட்டு தொகை வழங்காமல் இழுத்தடித்து வந்ததால் ஆவேசம் அடைந்த விவசாயிகள் மாலை கோவில்பட்டி தாலுகா அலுவலகம் முன்பு சாலையில் படுத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நீண்ட நேரமாகியும் அதிகாரிகள் எட்டி பார்க்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் மேலும் கோபம் அடைந்த விவசாயிகள் இரவு 7 மணி வரை சாலைகளை விட்டு விலகவில்லை. போராட்டம் காரணமாக அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் கேட்டு கொண்டும் விவசாயிகள் மசியவில்லை.
இதனால் அவர்கள் திகைப்பில் என்ன செய்வது என்று தெரியாமல் கையை பிசைத்தனர். இதுகுறித்து அவர்கள் தாசில்தாருக்கு தகவல் தெரிவித்தனர். அவர் இரவு 7.10 மணிக்கு விவசாயிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தியதை தொடர்ந்து விவசாயிகள் தற்காலிகமாக போராட்டத்தை கை விட்டு கலைந்து சென்றனர்.