விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் தேவை: குமுறும் கோவை விவசாயிகள்!
விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் தேவை என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
கோவை: விவசாயிகளின் விளை பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயம் செய்வதற்காக மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு இருந்தாலும் அதற்கான திட்டம் மற்றும் நிதி ஏதும் ஒதுக்காததால் அறிவிப்பாக மட்டுமே உள்ளதாக விவசாயிகள் குற்றச்சாட்டு வைத்து உள்ளனர்.
வருடம் முழுவதும் லாபம் மற்றும் நஷ்டம் என இரண்டையும் எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருப்பது விவசாயிகள் மட்டுமே. அதிக பொருட்கள் உற்பத்தி இருந்தாலும் குறைந்த விலைக்கு தாங்கள் விளைவித்த பொருட்கள் விற்பனையாவதை கண்கூடாத பார்க்கின்றனர்.
அத்துடன், அதனை ஏற்றுக் கொண்டும் மீண்டும் அடுத்த பொருட்களை உற்பத்தி செய்யவும் துவங்குகின்றனர். இதுபோன்று இருக்கும் விவசாயிகளுக்கு, அரசால் இயன்ற அனைத்து உதவிகளையும் செய்ய வேண்டும் என்பதே அவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
மத்திய பட்ஜெட் -வெறும் அறிவிப்பு
இந்நிலையில் கடந்த மத்திய பட்ஜெட்டில் விளைபொருட்களின் உற்பத்தி செலவை கணக்கிட்டு கூடுதல் லாபமாக ஒன்றரை மடங்கு கிடைக்கும் வகையில் குறைந்தபட்ச ஆதரவு விலையை மத்திய அரசு நிர்ணயிக்கும் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. ஆனால் அவ்வாறு கிடைத்திட எந்த வித செயல் திட்டமும் இல்லாமல் நிதியும் ஒதுக்காமல் வெறும் அறிவிப்பாக மட்டுமே உள்ளது விவசாயிகளுக்கு ஏமாற்றம் அளிப்பதாக கூறுகின்றனர்.
ஆதார விலை நிர்ணயிக்க வேண்டும்
விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கும் முயற்சியில் சில அறிவிப்புகளை மத்திய அரசு வெளியிட்டு இருந்த சூழலில், ஆதார விலை நிர்ணயிக்க தேவையான எந்த வித திட்டமும் கொண்டு வரவில்லை என்றும், தங்களுடைய வாழ்வாதாரத்தை மேம்படுத்த அரசு இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் குற்றச்சாட்டு வைத்து உள்ளனர்.
அரசே கொள்முதல் செய்யவேண்டும்
தண்ணீரின்றி வறண்டாலும், லாரிகளின் மூலமாக தண்ணீர் பாய்ச்சி, காலநிலைகளை சமாளித்து விளை பொருளை உற்பத்தி செய்யும் விவசாயிகள், அதற்கான உற்பத்தி செலவு கூட கிடைக்காததால் லாபம் என்பதை அடைய முடியாமல் தற்கொலைக்கு செல்லும் நிலைக்கு ஆளாவதாக தெரிக்கின்றனர். இதற்கு முக்கிய நடவடிக்கையாக ஒவ்வொரு விளைபொருளுக்கும் ஆதார விலையை நிர்ணயித்து, அதிக உற்பத்தியின்போது அரசு கொள்முதல் செய்து, பின்னர் தட்டுப்பாடு ஏற்படும் நேரங்களில் அரசு விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
நஷ்டத்தில் உழலும் விவசாயிகள்
வறட்சி காலங்களில் விலை உயர்வதும், தண்ணீர் இருக்கும்போது விலை குறைவதும், போதிய விளைச்சல் இருந்தாலும், அதற்குரிய விலை கிடைக்காமலும் , விவசாயிகள் நஷ்டத்தையே சந்திக்கின்றனர். பொதுமக்களுக்கு குறைந்த விலை கிடைக்க வேண்டும் என்பதற்காக விவசாயிகளுக்கு நஷ்டத்தை ஏற்படுத்த செய்வதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
சரியான திட்டமிடல் வேண்டும்
விவசாய விளைபொருட்கள் விலை கட்டுப்பாட்டை தகர்ப்பது முக்கிய திட்டமாக அரசு செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்து உள்ளனர் . பெட்ரோல் விலை மற்றும் எந்த தொழில் சார்ந்த பொருள்களின் விலை உயரும்போது அதன் விலைகுறைப்புக்கு இறக்குமதி செய்வதில்லை . விவசாய பொருளுக்கு மட்டும் விலை உயரும்போது இறக்குமதி செய்யப்படுகிறது. எனவே விவசாயிகளுக்கு எதிர்காலத்தில் நஷ்டம் ஏற்படாமல் தவிர்க்க அரசு போதிய திட்டமிடலுடன், நிதி ஒதுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்து உள்ளனர்.