வறட்சியால் விவசாயிகள் உயிரிழக்கவில்லை.. அமைச்சர் பேச்சால் விவசாயிகள் கொந்தளிப்பு
தமிழகத்தில் விவசாயிகள் தற்கொலை என்பது ஏதும் இல்லை என அமைச்சர் தங்கமணி கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல்: தமிழகத்தில் வறட்சியால் விவசாயிகள் தற்கொலை என்பது ஏதும் இல்லை. ஆனால் விவசாயிகள் மரணம் என்பது அரசிலாக்கப்பட்டு வருகிறது என அமைச்சர் தங்கமணி கூறியுள்ளது விவசாயிகள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
வடகிழக்கு பருவ மழை தாமதமாக ஆரம்பித்ததோடு, போதிய அளவு மழையும் பெய்யவில்லை. இதனால் தமிழகம் முழுவதும் வறட்சி ஏற்பட்டுள்ளது. காவிரியில் இருந்து முறையாக தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய தண்ணீர் கிடைக்கவில்லை. இதனால் காவிரி டெல்டா மாவட்டம் உள்ட தமிழகம் முழுவதும் பயிர்களுக்கு நீர் இல்லாமல் காய்ந்து வருவதைக் கண்டு நூற்றுக்கணக்கான விவசாயிகள் மரணம் அடைந்துள்ளனர்.
இதனையடுத்து, தமிழகம் முழுவதும் அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர்கள் வறட்சிக்குள்ளான பகுதிகளை பார்வையிட்டு வருகின்றனர். இந்நிலையில், அமைச்சர் தங்கமணி நாமக்கல்லில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தமிழகத்தில் வறட்சியால் விவசாயிகள் தற்கொலை என்பது ஏதும் இல்லை என கூறினார்.
மேலும் விவசாயிகள் மரணம் என்பதும் அரசிலாக்கப்படும் விஷயமாக இருக்கிறது. விவசாயம் பாதுகாப்பு குறித்து சர்வே நடந்து வருகிறது. முழுமையான தகவலுக்கு பிறகுதான் அது குறித்து தகவலை தமிழக அரசு தெரிவிக்கும். நாமக்கல்லில் எந்த விவசாயியும் தற்கொலை செய்து கொள்ளவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். அமைச்சரின் பேச்சால் விவசாயிகள் கடும் கொந்தளிப்பில் உள்ளனர்.