விவசாயிகளுக்கு பச்சை துரோகம் செய்கிறது தமிழக அரசு.. தூக்கி எறிவதே முதல் பணி.. விவசாயிகள் பாய்ச்சல்
விவசாயிகள் யாரும் தற்கொலை செய்து கொள்ளவில்லை என்று உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளதற்கு விவசாயிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
சென்னை: தமிழகத்தில் வறட்சியால் விவசாயிகள் யாரும் தற்கொலை செய்யவில்லை என்று உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு பிரமாணப் பத்திர தாக்கல் செய்துள்ளது.
மேலும், உடல்நலக்குறைவு, வயது முதிர்வினாலேயே விவசாயிகள் 82 பேர் உயிரிழந்தனர் என்றும் அதில் தமிழக அரசு குறிப்பிட்டுள்ளது.
இதற்கு விவசாயிகள் மற்றும் விவசாய சங்கங்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளன. விவசாயிகள் சங்கத்தின் தலைவர் தெய்வசிகாமணி இதுகுறித்து கூறியதாவது:
துரோகம்
தமிழக அரசு விவசாயிகளுக்கு செய்த பச்சை துரோகமாகத்தான் இதனைப் பார்க்கிறோம். 38 ஆயிரம் கோடிக்கு மேல் வறட்சி நிவாரணம் வேண்டும் என்று மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பிய தமிழக அரசு விவசாயிகள் ஒருவரும் இறக்கவில்லை என்று பிரமாணப் பத்திரத்தை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.
வயிற்றில் அடித்த அரசு
இது முன்னுக்குப் பின் முரணானது. இந்த அரசுக்கு விவசாயிகள் மீது அக்கறை கிடையாது. இந்த அரசு விவசாயிகளை வஞ்சிக்கிறது. ஏமாற்றுகிறது. இந்த பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்துள்ளதன் மூலம் விவசாயிகளின் வயிற்றில் அடித்துள்ளது.
இரக்கம்
விவசாயிகளின் தற்கொலையை தடுக்க வேண்டும் என்ற எண்ணமே இந்த அரசுக்கு இல்லை. இது சுயநலம் பிடித்த, இரக்கமில்லாத ஒரு அரசாகத்தான் நான் இதைப் பார்க்கிறேன்.
நிர்பந்தம்
இந்த அரசு இனி விவசாயிகளுக்கு பயன்படாது. விவசாயிகளை காப்பாற்றாது. விவசாயிகள் மீது அக்கறை இல்லை. இந்த அரசை அப்புறப்படுத்துவதற்கான போராட்டத்தை கையில் எடுக்க வேண்டிய நிர்பந்தத்திற்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.
அய்யாகண்ணு
விவசாயிகளின் பயிர் கடனை தள்ளுபடி செய்தால்தான் இதுபோன்ற பிரச்சனைகள் வராது. சட்டப்படி என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அதனை வங்கிகள் எடுத்துக் கொள்ளட்டும். ஆனால் விவசாயிகளை மிரட்டக் கூடாது என்றாவது தமிழக அரசு வங்கி அதிகாரிகளை வலியுறுத்த வேண்டும். இதனை செய்யாதவரை விவசாயிகள் தற்கொலை தொடர்ந்து கொண்டுதான் இருக்கும். என்று அய்யாகண்ணு கூறியுள்ளார்.