எத்தனை காலம்தான்...கருகிய நெல் பயிர்.. நிவாரணம் கேட்டு விவசாயிகள் முற்றுகை போராட்டம்
செங்கோட்டை: தண்ணீர் இல்லாமல் கருகிய நெல் பயிருக்கு நிவாரணம் கேட்டு செங்கோட்டை தாலுக்கா அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம் நடத்தியுள்ளனர்.
நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் கற்குடி, வேம்பநல்லூர், புளியரை, தெற்குமேடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்களில் நெல் பயிரை விவசாயிகள் நடவு செய்திருந்தனர். நெல் பயிர் வளர்ந்து வந்த நிலையில், முதல் கட்டமாக களைகள் அகற்றப்பட்டும் உரங்கள் தெளித்தும் நெல் பயிர்கள் காப்பாற்றப்பட்டு வந்தன.
இந்நிலையில், போதிய தண்ணீர் இல்லாமல் பயிர்கள் வாடத் தொடங்கின. தென்மேற்கு பருவமழையும் ஏமாற்றிவிட, குளங்கள் மற்றும் கால்வாய்கள் மூலம் தண்ணீர் பாய்ச்சி நெல் பயிர்களை காப்பாற்றும் பணியில் விவசாயிகள் தொடர்ந்து ஈடுபட்டு வந்தனர். ஆனால் பயிர்களை காப்பாற்ற முடியவில்லை. நெல்பயிர் காய்ந்து தற்போது மாடுகளின் தீவனமாக மாறியுள்ளது. தங்களது பயிர்களை காப்பாற்ற எடுத்த முயற்சிகள் அனைத்தும் தோல்வி அடையவே விவசாயிகள் பெரும் கவலையடைந்துள்ளனர்.
இதனையடுத்து, தண்ணீர் இல்லாமல் பயிர்கள் வாடி நட்டம் ஏற்பட்டுள்ளதால் தங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரி இன்று 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் செங்கோட்டை தாலுக்கா அலுவலகத்தை முற்றுகை போராட்டத்தை நடத்தி துணை வட்டாட்சியரிடம் மனு ஒன்றை அளித்துள்ளனர்.