60 ஆண்டு கனவு அத்திக்கடவு- அவினாசி திட்டத்தை முழு வீச்சில் நிறைவேற்ற விவசாயிகள் கோரிக்கை!
அத்திக்கடவு அவினாசி திட்டத்தை விரைவாக நடைமுறைப்படுத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை: மேற்கு மண்டல மக்களின் 60 ஆண்டுகால கோரிக்கையான அத்திக்கடவு, அவினாசி திட்டத்துக்குச் செவிசாய்த்து, ரூ1,652 கோடி ஒதுக்கியிருக்கிறது தமிழக அரசு. ' நிர்வாக அனுமதி வழங்கியதுடன் நிற்காமல் அவினாசி - அத்திக்கடவு திட்டம் செயல்படுத்துவதற்கான பணிகளை தமிழக அரசு உடனடியாகத் தொடங்க வேண்டும்' எனக் கோரிக்கை வைக்கின்றனர் அப்பகுதி விவசாயிகள்.
கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மூன்று மாவட்டங்களும் பலன்பெறக் கூடிய அத்திக்கடவு-அவினாசி திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என நீண்டகாலமாகப் போராடி வருகின்றனர் விவசாயிகள். இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டால், 843 ஊராட்சிகளில் உள்ள 74 குளங்கள், 971 குட்டைகளில் நீர் நிரப்பப்படுவதோடு மட்டுமல்லாமல், மேற்கு மக்களின் வாழ்வாதாரமாகவும் மாறும்.
அரசியல் கட்சிகளின் ஒவ்வொரு தேர்தல் அறிக்கைகளில் இத்திட்டம் நிறைவேற்றப்படும் என்ற வாசகம் இடம்பெறுவதும் பின்னர் கிடப்பில் போடுவதும் வழக்கமாகவே இருந்து வந்தது. ஒருகட்டத்தில் கொதித்துப் போன விவசாயிகள், அத்திக்கடவு-அவினாசி திட்டத்தை முன்னிறுத்தி பொது வேட்பாளர்களையும் களமிறக்கினார்கள். பிரதான கட்சிகளுக்கே சவால்விடும் வகையில் அந்த வாக்காளர்கள் வாக்குகளை அள்ளினர்.
விவசாயிகளின் இந்த விநோத போராட்டத்தால் அ.தி.மு.க, தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் அதிர்ச்சியடைந்தன. ஒவ்வொரு தேர்தலிலும் அப்பகுதி விவசாயிகளை சமாதானப்படுத்துவதே பெரும்பாடாக இருந்தது. இந்நிலையில், 'மேற்கு மண்டல மக்களின் தேவைகளை நன்கு அறிந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.
முதல்வரை நேரில் சந்தித்தும் வலியுறுத்தினர். இதையடுத்து, கடந்த வருடம் திருப்பூரில் நடைபெற்ற எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில், அத்திக்கடவு திட்டத்தில் சில மாற்றங்கள் செய்து, ஈரோடு மாவட்டம் பவானி அருகே காளிங்கராயன் அணைக்கட்டில் இருந்து மின் மோட்டார் மூலம் குழாய்களின் வழியாக 3 மாவட்டங்களில் உள்ள ஏரி, குளம் மற்றும் ஏனைய நீர்நிலைகளில் நீர் நிரப்பும் திட்டத்தை முதல்வர் பழனிசாமி அறிவித்தார்.
இதையடுத்து, தற்போது திட்டத்தைச் செயல்படுத்தும் வகையில் குழாய் அமைத்தல், மின் இணைப்பு, நீர் இறைத்தல், ஐந்தாண்டு தொடர் பராமரிப்புப் பணி மேற்கொள்ளுதல் போன்ற பணிகளுக்காக நிர்வாகரீதியான அனுமதியை வழங்கியும் ரூ1,652 கோடி ஒதுக்கியும் அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்மூலம், பல ஆண்டுகாலப் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது.
இதுகுறித்து நம்மிடம் பேசிய போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் ஒருவர், அரசின் அறிவிப்பு மகிழ்ச்சியை அளிக்கிறது. 60 ஆண்டுகாலப் போராட்டம் செயல் வடிவுக்கு வந்துவிட்டது. மேற்கு மண்டலத்தில் படிப்படியாக அழிந்து கொண்டிருக்கும் விவசாயத்தைக் காப்பதற்கு இத்திட்டம் பெரிய அளவில் துணைபுரியும். பவானி ஆற்றில் இருந்து நீரை எடுத்துச் செயல்படுத்துவதால், நிலத்தடி நீரின் அளவும் உயரும். வரும் காலங்களில் தண்ணீர் தட்டுப்பாடு இல்லாத சூழ்நிலை உருவாகும். தமிழக அரசு நிர்வாக அனுமதி வழங்கியதோடு மட்டுமல்லாமல், அத்திக்கடவு-அவினாசி திட்டம் செயல்படுத்துவதற்கான பணிகளை உடனடியாகத் தொடங்க வேண்டும். இதனை ஒவ்வொரு நிலையிலும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கண்காணிக்க வேண்டும்" என்றார்.