வைகை அணை நீர் உரிமைக்காக 5 மணி நேரம் போராடி சாதித்த மேலூர் விவசாயிகள்!
வைகை அணையிலிருந்து பெரியாறு பிரதான கால்வாயில் தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று கோரி மதுரை- திருச்சி நெடுஞ்சாலையில் மேலூர் சுற்றுவட்டார விவசாயிகள் ஆயிரக்கணக்கானோர் மறியல் போராட்டம் நடத்தினர்.
மதுரை: வைகை அணை நீர் உரிமைக்காக 5 மணி நேரமாக போராடிய விவசாயிகள் முதல்வரின் உத்தரவை அடுத்து தங்களது போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.
மேலூர் பகுதியில் வைகை அணை நீரை நம்பி இருக்க கூடிய விவசாயிகள் இந்த ஆண்டிற்கான பாசனம் மற்றும் குடிநீருக்காக பெரியாறு பிரதான கால்வாயில் தண்ணீர் திறந்து விட கோரிக்கை விடுத்திருந்தனர். இதனை வலியுறுத்தி மேலூர் பகுதி விவசாயிகள் கடந்த 17-ஆம் தேதி பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் பிரபுவிடம் மனு அளித்தனர்.
ஆனால் கம்பம் பள்ளத்தாக்கு பயனடையும் வகையில் பி.டி.ஆர் மற்றும் தந்தை பெரியார் வாய்க்கால்களுக்கு வைகை அணை நீர் திறக்கப்பட்டது. இதனால் பெரியாறு பிரதான வாய்க்காலை நம்பியுள்ள மேலூர் சுற்றுவட்டார விவசாயிகள் கொந்தளித்தனர்.
ஆட்டோக்கள் ஓடவில்லை
பெரியாறு பிரதான கால்வாயில் உடனே வைகை நீரை திறந்துவிட வலியுறுத்தி இன்று மேலூரில் முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்றது. காலை முதல் மேலூர் மற்றும் கீழவளவு, வெள்ளலூர் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. ஆட்டோக்களும் ஓடவில்லை.
விவசாயிகள் எதிர்ப்பு
கடந்த சில ஆண்டுகளாக வறட்சியால் விவசாயம் பொய்த்து போனது. தற்போது வைகை அணையில் நீர் இருப்பு அதிகரித்ததால் வழக்கம் போல பெரியாறு பிரதான கால்வாயில் முதலில் நீர் திறந்துவிட வேண்டும் என வலியுறுத்தினர் திண்டுக்கல், மதுரை மாவட்ட விவசாயிகள். ஆனால் வழக்கத்துக்கு மாறாக தேனி மாவட்டம் பயனடையும் வகையில் பிடிஆர் கால்வாய், தந்தை பெரியார் வாய்க்காலில் வைகை அணை நீரை திறந்துவிட்டதுதான் விவசாயிகளின் ஆவேசத்துக்கு காரணமாகும்.
முதல்வர் உத்தரவு
இதனால் மதுரை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சாமியானா பந்தல் அமைத்து ஆயிரக்கணக்கான விவசாயிகள் மறியலில் ஈடுபட்டனர். 5 மணி நேரமாக விவசாயிகள் நடத்திய போராட்டத்துக்கு பலன் கிடைத்துவிட்டது. வைகை அணையிலிருந்து 6 நாள்களுக்கு 900 கனஅடி நீர் திறந்து விட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.
விவசாயிகள் கருத்து
முதல்வரின் உத்தரவை அடுத்து போராட்டத்தை விவசாயிகள் தற்காலிகமாக வாபஸ் பெற்றனர். இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், 6 நாள்கள் தண்ணீர் என்பது எங்களுக்கு வாய்க்காலில் இருந்து வருவதற்கே தாமதமாகிவிடும். இது போதாது. எனினும் எங்களது மறியலால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெற்றுக் கொண்டோமே தவிர முதல்வரின் உத்தரவில் திருப்தி இல்லை என்று தெரிவித்தனர்.