தண்ணீர் பற்றாக்குறை.. குளம் அமைக்க ரூ.1 கோடி நிலம் தானம்.. சபாஷ் விவசாயிகள்
தண்ணீர் பற்றாக்குறையை போக்க நிலத்தை விவசாயிகள் தானமாக வழங்கியுள்ளனர்.
Recommended Video
ஈரோடு: கிராம மக்களின் தண்ணீர் பற்றாக்குறையை போக்கி குளம் அமைக்க தங்களுடைய 1 கோடி ரூபாய் நிலத்தை விவசாயிகள் தானமாக வழங்கியுள்ளனர்.
கோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்பது பழமொழி. இதற்கு காரணம் கோவில் இருந்தால் அங்கு குளம் இருக்கும். தண்ணீர் பற்றாக்குறை வராது என்பதால்தான்.
இருக்கும் குளங்களை ஆக்கிரமித்து வரும் காலத்தில் தங்களுடைய நிலத்தை தானமாக வழங்கி புதிய குளம் அமைத்து வரும் விவசாயிகள் குறித்த செய்திதான் இது.
காவிரி, காலிங்கராயன்
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகே கிளாம்பாடி, பாம்பகவுண்டன் பாளையம் ஆகிய கிராமங்கள் அமைந்துள்ளது. இந்த கிராமங்களில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. விவசாயத்தை பிரதானமாக கொண்ட இப்பகுதியில் காவிரி ஆறும்,காலிங்கராயன் வாய்க்காலும் செல்கிறது. இந்த நீரை பாசனத்துக்கு பயன்படுத்தி நெல்,கரும்பு,வாழை உள்ளிட்ட பயிர்களை விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர்.
தானமாக நிலம்
இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஏற்பட்ட கடுமையான வறட்சியால் இப்பகுதியில் பாசனம் பெற்று வந்த சுமார் 1000-ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டதோடு நிலத்தடி நீர் மட்டமும் குறைந்து தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதற்கு தீர்வு காணும் வகையில் அப்பகுதியில் குளம் ஒன்றை அமைக்க விவசாயிகள் முடிவு செய்தனர். இதற்காக விவசாயிகள் 42-பேர் தங்களுக்கு சொந்தமான 5-சென்டு முதல் 30-சென்டு வரையிலான 1.7 ஏக்கர் நிலத்தை தானமாக வழங்க முன்வந்தனர்.
வெள்ளநீர் சேமிப்பு
இந்த நிலத்தின் மதிப்பு ஒரு கோடி ரூபாயாகும். இதனையடுத்து ஒளிரும் ஈரோடு என்ற தன்னார்வ அமைப்பின் சார்பில் 40-லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் குளம் அமைக்கும் பணி தொடங்கியுள்ளது. 10-அடி உயரத்திற்கு அமையும் இந்த குளத்தில் காலிங்கராயன் பாசன வாய்க்கால் கசிவுநீரையும் மழை காலத்தில் வரும் வெள்ள நீரையும் சேமிக்க திட்டமிட்டுள்ளனர்.
முன்மாதிரி விவசாயிகள்
இதனால் வீணாகும் நீர் சேமிக்கப்பட்டு சுமார் ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விளைநிலங்கள் பாசன வசதி பெறுவதோடு பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலத்தடி நீர் மட்டம் உயரும் என்பது விவசாயிகளின் நம்பிக்கை. வெள்ள நிவாரணம், வறட்சி நிவாரணம்,விவசாய கடன் தள்ளுபடி என விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் மற்ற மாவட்ட விவசாயிகளுக்கு முன்மாதிரியாக திகழும் ஈரோடு மாவட்ட விவசாயிகளை பாராட்டலாமே?