கொல்லப் பாய்ந்த சிறுத்தை... கட்டிப்புரண்டு சண்டையிட்ட விவசாயிகள்
நீலகிரி மாவட்டம், கூடலூர், கோழிப்பாலம் பகுதியை சேர்ந்தவர்கள், ஆசைத்தம்பி, 40, மற்றும் ரங்கசாமி, 42. இவர்கள், அதே பகுதியில், தேயிலை தோட்டத்தை குத்தகைக்கு எடுத்து பராமரித்து வருகின்றனர். இருவரும், நேற்று காலையில் வழக்கம் போல, தேயிலை தோட்டத்திற்கு சென்றனர். அப்போது, அங்கு பதுங்கி இருந்த சிறுத்தை ஒன்று, திடீரென அவர்களை தாக்கியது; அதில், இருவரும் தடுமாறினர்.
உடனே ரங்கசாமி, கையில் இருந்த கத்தியால், சிறுத்தையை தாக்கி, தப்பிக்க முயன்றார்; ஆசைத்தம்பியும், கையில் இருந்த தடியால் சிறுத்தையை தாக்கினார்.
உயிரை காப்பாற்றி கொள்ள இருவரும், சிறுத்தையிடம் சண்டையிட்டனர். சிறிது நேரம் நடந்த சண்டையில், களைப்படைந்த சிறுத்தை, அவர்களை விட்டு ஓடியது; இருவரும், காயங்களுடன் உயிர் தப்பினர்.
சத்தம் கேட்டு அருகே, தோட்டத்தில் பணியாற்றியவர்கள், இருவரையும் மீட்டு, கூடலூர் அரசு மருத்துவமனையில் சேர்ந்தனர். தகவல் அறிந்த வன அலுவலர்கள், சம்பவ இடத்திற்கு சென்று, விசாரணை நடத்தினர்; சிறுத்தையின் கால் தடங்களை ஆய்வு செய்தனர்.
சம்பவம் குறித்து, ரங்கசாமி கூறுகையில், ''திடீரென பாய்ந்த சிறுத்தை, என் இடது கையில் தாக்கியது. உயிர் தப்பிக்க, மற்றொரு கையில் இருந்த கத்தியால், சிறுத்தையை குத்தினேன். அந்த கையையும், சிறுத்தை தாக்கியது. அப்போது, ஆசைத்தம்பி ஓடி வந்து, சிறுத்தையை தாக்கி, என்னைக் காப்பாற்றினார்,'' என்றார்.
ஆசைத்தம்பி கூறுகையில், ''ரங்கசாமியை தாக்கிய சிறுத்தையை தடுத்த போது, அது, என்னையும் தாக்கியது. பின், இருவரும் சிறுத்தையுடன் சண்டையிட்டு, உயிர் தப்பினோம்,'' என்றார்.
அதேசமயம் 'சிறுத்தையை விவசாயிகள் தாக்கியதாக கூறியுள்ளதால், அதன் நிலை குறித்து தெரியவில்லை. சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணித்து வருகிறோம். தேவைப்பட்டால், அதை உடனடியாக பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்' என, வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.