விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டத்தில் ‘கேன்டி க்ராஸ்’ விளையாடிய பெண் அதிகாரி
தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டத்தில் பெண் அதிகாரி ஒருவர் வீடியோ கேம் விளையாடியது அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு தகுந்த பதிலளிக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
தர்மபுரி மாவட்டத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியர் விவேகானந்தன் தலைமையில் நேற்று நடந்தது. இதில் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் விவசாயிகளின் கேள்விகளுக்கு ஆட்சியர் விவேகானந்தன் பதில் அளித்துக் கொண்டிருந்த போது ஆட்சியர் அருகே அமர்ந்திருந்த அரூர் சர்க்கரை ஆலை நிர்வாக இயக்குனர் கவிதா செல்போனில் வீடியோ கேம் விளையாடிக் கொண்டிருந்தார்.
விவசாயிகள் பேசியதையும் கேட்கவில்லை. மாவட்ட ஆட்சியர் அளித்த பதிலையும் கவனிக்கவில்லை. கவிதா கீழே குனிந்தவாறு செல்போனில் ஆர்வத்துடன் விளையாடிக் கொண்டிருந்ததை கூட்டத்திற்கு வந்த சிலர் புகைப்படம் எடுத்தனர். சிலரோ வீடியோவிலும் பதிவு செய்தனர்.
இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த கவிதா விளையாட்டை நிறுத்திவிட்டு கூட்டத்தை கவனிக்க ஆரம்பித்தார். 5 நிமிடங்களுக்கு மேல் அவர் செல்போனில் வீடியோ கேம் விளையாடிக் கொண்டிருந்தார். இந்த காட்சிகள் தற்போது 'வாட்ஸ்-அப்' மூலம் வேகமாக பரவி வருகிறது.
இதுகுறித்து தர்மபுரி மாவட்ட ஆட்சியர் விவேகானந்தனிடம் கேட்டபோது விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில் அதிகாரி கவிதா வீடியோ கேம் விளையாடியது தொடர்பாக வந்த தகவலை அடுத்து அவருக்கு விளக்கம் கேட்டு இன்று நோட்டீசு அனுப்ப உள்ளோம். அவர் அளிக்கும் தகவலை பெற்று சர்க்கரை ஆலை ஆணையர் மற்றும் பொதுத்துறைக்கு அனுப்பி வைக்கப்படும். அவர்கள் தான் மேல் நடவடிக்கை எடுப்பார்கள் என்று கூறினார்.
விவசாயிகள் அதிர்ச்சி
தங்களின் குறைகளைத் தீர்ப்பார் என்றுதான் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தோம். கூட்டத்திற்கு வந்தும் தங்களின் பேச்சைக் கேட்காமல் செல்பேனில் விளையாடியது எந்த விதத்தில் நியாயம். இதற்கு தகுந்த பதிலளிக்க வேண்டும், அதிகாரி கவிதா மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.