நெருங்கும் பொங்கல் பண்டிகை: தேவதானம்பட்டியில் கரும்பு வாங்க குவிந்த வியாபாரிகள்
தேனி: பொங்கல் பண்டிகை நெருங்கிவருவதை முன்னிட்டு தேவதானம்பட்டியில் கரும்பு வாங்க வெளிமாநில வியாபாரிகள் குவிந்துள்ளனர்.
பொங்கல் பண்டிகை என்றாலே நினைவுக்கு வருவதும் முதல் இடத்தைப் பிடிப்பதும் கரும்பு தான். கரும்பு இல்லாமல் பொங்கல் இல்லை. மேலும் தேவதானப்பட்டியில் புகழ் பெற்ற அருள்மிகு காமாட்சியம்மன் கோயில் உள்ளது.
அக்கோயிலில் அமைந்துள்ள அருள்மிகு காமாட்சியம்மன் கரும்புடன் பக்தர்களுக்கு காட்சி தருவதால் என்னவோ மற்ற பகுதிகளின் கரும்பை விட தேவதானப்பட்டி கரும்பு சுவையாக இருக்கும். தேவதானப்பட்டியில் உள்ள வேம்பும், கரும்பும் புகழ் பெற்றது. இப்பகுதியில் விளையும் வேப்பங்காய் அதிகமான கசப்புடனும், இப்பகுதியில் உள்ள கரும்பு அதிகமான இனிப்புடனும் இருக்கிறது.
வேம்பும், கரும்பும் செழித்த பகுதி என பண்டை காலத்தில் இப்பகுதியை மக்கள் பாராட்டுவார்கள். அதே போல காமாட்சியம்மன் கோவில் திருவிழாவில் முக்கிய பங்கு வகிப்பது இந்த கரும்புதான்.
ஒவ்வொரு பக்தர்களும் காமாட்சியம்மன் கோவில்பகுதியில் உள்ள நுழைவு வாயிலில் கரும்புகளை சுவைத்துக்கொண்டே தங்களுடைய இல்லத்திற்கு திரும்புவார்கள். மேலும் கரும்பு விளைந்தவுடன் இங்கு பயிரிட்ட விவசாயிகள் எந்த மதத்தைச் சார்ந்தவர்கள் ஆனாலும் முதல் கரும்பை இங்குள்ள மயிலீஸ்வரன் கோயிலிலும், அருள்மிகு காமாட்சியம்மன் கோயிலிலும் சாமி கும்பிட்டுத்தான் விற்பனையைத்துவங்குவார்கள்
இந்த கரும்பு இரண்டு வகைகளாக பிரித்துள்ளனர். ரோஸ் கரும்பு, பீய்ச்சி கரும்பு என இருவகையாக பிரித்துள்ளனர்.மற்ற கரும்புகளை போல இந்த கரும்பை பயிரிடமுடியாது. இந்த கரும்பை அதற்கேற்ற மண்வளத்தில் தான் பயிரிடமுடியும்.
கரும்பு விளையும் பூமி
தேவதானப்பட்டியில் உள்ள மஞ்சள் ஆற்று படுகையில் காமாட்சியம்மன் கோவில் பகுதி மற்றும் கட்டமாவடி பகுதியில்தான் செங்கரும்பு சுமார் 100க்கும்மேற்பட்ட ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ளது.
கரும்பு நடவு
கரும்பு 1வருட பயிராகும். ஆண்டுதோறும் மாசி மாதத்தில் நடவு செய்யப்படும். கரும்பு நட்ட 30 நாட்கள் முதல் களை எடுத்தும் 6 மாதம் கழித்து தோகை உரித்தும் பணியை மேற்கொள்வார்கள் விவசாயிகள்.
சுவையான கரும்பு
தேவதானப்பட்டியில் உள்ள கரும்பு சுவையாக இருப்பதால் ஆந்திரா, கர்நாடகா மற்றும் தமிழகத்தின் பிறமாவட்டங்களில் இருந்து கரும்புகளை வாங்க வியாபாரிகள் வருவார்கள் என்கிறார் தேவதானப்பட்டியைச் சேர்ந்த விவசாயி ஆர்.பாண்டி.
குவிந்த விவசாயிகள்
பொங்கல் பண்டிகைக்கு இன்னும் சில தினங்களே உள்ளதால் வெளியூர் விவசாயிகள் தேவதானப்பட்டியில் கரும்பு வாங்க குவிந்முள்ளனர். சில வியாபாரிகள் ஒரு ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்தோ அல்லது கட்டுக்கணக்கில் விலை நிர்ணயம் செய்து கரும்பை வாங்கிச் செல்கின்றனர்.
விவசாயிகளுக்கு கசப்பு
ஒரு கட்டிற்கு பத்து கரும்பு இருக்கும். ஒரு கட்டின் விலை ரூ.100லிருந்து 150 வரை விற்பனை ஆகிறது என்றார் இனிக்கும் கரும்பாக இருந்தாலும் விவசாயிகள் ஆண்டுதோறும் கசப்பைத்தான் அனுபவித்துவருகிறார்கள்.
ஊரின் பெருமை
கூலி ஆட்கள் பற்றாக்குறை, தண்ணீர்தட்டுப்பாடு, மின்சார தட்டுப்பாடு, இடைத்தரகர்கள் ஆதிக்கம், வங்கிகள் கடன் தருவதற்கு அலைக்கழிப்பு, என பலவித காரணிகள் இருந்தாலும் தன்னுடைய ஊரின் பெருமையை பறைசாற்ற கரும்பு விவசாயத்தை இன்னும் தன்னுயிரை கொடுத்தாவது காப்பாற்றி வருகிறார்கள்.
அரசு மானியம்
அரசு சார்பில் மானியத்துடன் கூடிய கடனும், கரும்பு விவசாயத்திற்கு தேவையான உரம் மற்றும் மருந்துகளை வேளாண்மைத்துறை மூலம் கொடுத்தால் இனிக்கும் கரும்பைபோல விவசாயிகளின் வாழ்க்கையும் இனிக்கும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.