2.247 கோடி வறட்சி நிவாரணம் தொகை.. ஏமாற்றம் அளிக்கிறது… பி.ஆர். பாண்டியன்
விவசாயிகளுக்கு ரூ.2.247 கோடி வறட்சி நிவாரண தொகை வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளது ஏமாற்றம் அளிக்கிறது என்று பி.ஆர். பாண்டியன் கூறியுள்ளார்.
சென்னை: வறட்சியின் காரணமாக 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் மரணம் அடைந்துள்ள நிலையில், தமிழக அரசு அறிவித்துள்ள நிவாரணத் தொகை ஏமாற்றம் அளிக்கிறது என்று விவசாயிகள் சங்கத் தலைவர் பி. ஆர். பாண்டியன் கூறியுள்ளார்.
தமிழகத்தின் முதல்வராக புதிதாக பொறுபேற்றுள்ள பழனிச்சாமி, நேற்று விவசாயிகளுக்கு நிவாரணத் தொகை விரைவில் அளிக்கப்படும் என்று கூறியிருந்தார். அதன்படி, இன்று விவசாயிகள் நிவாரணத் தொகையாக 2.247 கோடி ரூபாய் வறட்சி நிவாரணத் தொகை வழங்க உத்தரவிட்டுள்ளார்.
இந்த அறிவிப்பிற்கு விவசாயிகள் கடும் அதிருப்தியை தெரிவித்துள்ளனர். இதுகுறித்து விவசாயிகள் சங்கத் தலைவர் பி.ஆர். பாண்டியன் கூறியதாவது:
விவசாயிகள் தற்கொலை
வறட்சியின் காரணமாக 275க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். 17 பேருக்கு மட்டும் நிவாரணம் என தமிழக அரசு அறிவித்தது. அவர்களின் புகைப்படத்துடனும் முகவரியோடு பட்டியல் தயாரித்து வைத்துள்ளோம். விரைவில் அந்த பட்டியலை வெளியிட உள்ளோம்.
அறிவிப்போடு சரி..
தமிழகம் வறட்சி மாநிலமாக அறிவிக்கப்பட்டதே தவிர எந்த ஒரு நிவாரணத் தொகையையும் இதுவரை அரசு வழங்க வில்லை. 70 வயதிற்கும் மிகாமல் இறந்து போன விவசாயிகள் அனைவருக்கும் நிவாரணம் வழங்கப்படும் என்றும் அதுகுறித்த ஆய்வு நடத்தப்படும் என்றும் மாவட்ட அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் அதற்கான எந்தப் பணிகளும் இதுவரை நடைபெறவில்லை.
வேதனை அதிகரிப்பு
2014-15 ஆண்டு சாகுபடி செய்த விவசாயிகள் தண்ணீர் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டனர். அந்த விவசாயிகளுக்கு காப்பீட்டு நிறுவனங்கள் நிவாரணம் வழங்க தயாராக இருக்கிறது. ஆனால் மத்திய மாநில அரசுகள் அதற்கான நிதி ஆதாரத்தை ஒதுக்கவில்லை. இரண்டாண்டு ஆகியும் நிவாரணம் பெற முடியவில்லை. இதற்கிடையில் இந்த ஆண்டுக்கான நிவாரணம் எப்போது கிடைக்கும் என்பது தெரியவில்லை.
பழைய பஜனை
தற்போதுள்ள நெருக்கடியை புரிந்து தமிழக அரசு செயல்பட வேண்டும். பழைய நிதி ஒதுக்கீடுகளை எல்லாம் சொல்லி தப்பிக்க முடியாது. தமிழக அரசு தற்போது அறிவித்துள்ள நிவாரணம் போதுமானதாக இல்லை என்று பி.ஆர். பாண்டியன் கூறியுள்ளார்.