அழுகிற பிள்ளைக்கு பால் கொடுக்காமல் அண்டை வீட்டு குழந்தைக்கு பால் கொடுப்பதா? விவசாயிகள் ஆவேசம்
நிலக்கரி சுரங்கத்திலிருந்து சென்னைக்கு தண்ணீர் எடுப்பது என்ற தமிழக அரசின் திட்டத்துக்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
நெய்வேலி: தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை பொய்த்துவிட்ட நிலையில் தண்ணீர் இல்லாமல் விவசாயிகளே பாதிக்கப்பட்டுள்ளதால் நெய்வேலி சுரங்கத்திலிருந்து தண்ணீர் எடுக்கும் தமிழக அரசின் திட்டத்துக்கு விவசாய அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன.
இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை பொய்த்துவிட்டதால் தமிழகம் முழுவதிலுமுள்ள மக்கள், குறிப்பாக விவசாயிகள் கடும் வறட்சியால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகம் முழுவதும் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது.இதனால் மக்கள் காலிக்குடங்களுடன் தண்ணீரை தேடி சென்று வருகின்றனர்.
வெள்ளம்
காவிரி டெல்டா விவசாயிகள் தண்ணீருக்காக கர்நாடகம், கேரளம், ஆந்திரம் ஆகிய அண்டைய மாநிலங்களிடம் கையேந்தி வந்த நிலையில் சென்னையில் கடந்த ஆண்டு பெய்த மழையால் அந்த மாநிலங்களுக்கே தண்ணீர் விநியோகிக்கும் அளவுக்கு காணும் இடங்களில் எல்லாம் வெள்ளமாக இருந்தது.
சேமிக்க தவறிய அரசு
இத்தகைய வெள்ள நீரை மழைநீர் சேமிப்பு உள்ளிட்ட திட்டங்களை பயன்படுத்தி தமிழக அரசு சேமிக்க தவறியதால் அந்த நீரானது கடலில் சென்று வீணாக கலந்தது. ஒவ்வொரு ஆண்டும் இவ்வாறு பெய்யும் மழையை சேமிக்க அரசு முனைப்பு காட்டுவதில்லை என்று மக்கள் தெரிவித்தனர்.
பொய்த்து விட்ட மழை
பஞ்சாங்கங்களில் குறிப்பிட்ட படி இந்த ஆண்டும் அதிக அளவிலான மழை பெய்யக் கூடும் என்று எதிர்பார்த்திருந்த நமக்கு ஏமாற்றமே விஞ்சியது. இதனால் வறட்சி ஏற்பட்டு விவசாயிகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன.
தண்ணீர் தட்டுப்பாடு
கோசைக் காலத்துக்கு முன்பே வெயில் சுட்டெரிப்பதால பெரும்பாலான நீர் நிலைகள் வறண்டு விட்டன. இதனால் தமிழகம் முழுவதும் மக்கள் தண்ணீருக்காக படாதபாடு பட்டு வருகின்றனர். சென்னைக்கு வரும் சோழவரம் ஏரியும் வறண்ட நிலையில் கோடை தொடங்குவதற்கு முன்பே இந்த நிலையால் சென்னைவாசிகள் பீதியில் உறைந்துள்ளனர்.
போராட்டங்கள்
ஆங்காங்கே தண்ணீர் பஞ்சத்தை போக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டங்களும், போராட்டங்களும், சாலை மறியல்களும் நடைபெற்று வருகின்றன. எனினும் அந்த சமயத்தில் அதிகாரிகள் அவர்களை சமாதானம் செய்வதோடு சரி. நிரந்திர தீர்வு காணப்படுவதில்லை. பெரும்பாலான மக்களுக்கு 40 நாள்களுக்கு ஒரு முறை தண்ணீர் வருவதாகவும் மக்கள் குற்றம்சாட்டினர்.
வீராணமும் வறண்டது
சென்னையில் கடும் தண்ணீர் பஞ்சம் நிலவியதால் வீராணத்திலிருந்து தண்ணீர் எடுத்து பிரச்சினையை சமாளிக்க அரசு முற்பட்டது. ஆனால் வீராணமும் வறண்டது விட்டதால் நெய்வேலியில் உள்ள சுரங்கத்திலிருந்து சென்னைக்கு குடிநீர் எடுக்க திட்டமிட்டுள்ளது.
விவசாயிகள் எதிர்ப்பு
இதற்கு நெய்வேலி விவசாய சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதுகபறித்து விவசாயிகள் தெரிவிக்கையில், தண்ணீர் இல்லாமல் விவசாயமே நலிந்து வரும் நிலையில் இங்கிருந்து தண்ணீர் எடுத்து சென்னைக்கு கொடுப்பது என்பது அழுத புள்ளைக்கு பால் கொடுக்காமல் பக்கத்தில் இருக்கும் புள்ளைக்கு பால் கொடுப்பது போன்று உள்ளது.
40 ஆயிரம் பயிர்கள் நாசம்
நெய்வேலியிலிருந்து தண்ணீர் எடுத்தால் 150 கிராமங்களுக்கு, 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயிர்களும் பாதிக்கப்படும் நிலை உள்ளது என்று அவர்கள் தெரிவித்தனர்.
இதன் மூலமாவது சென்னையின் குடிநீர் தட்டுப்பாட்டை கொஞ்சமாவது போக்கிக் கொள்ளலாம் என்று மக்கள் நிம்மதி அடைந்த நிலையில் இந்த திட்டத்துக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.